2015-05-18 15:34:00

கடுகு சிறுத்தாலும் – முதலில் தெரிந்து கொள்ள வேண்டியவை


தன்னுடைய விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ள விரும்பிய ஒருவர் ஒருநாள் ஓர் ஆசிரமம் சென்றார். அங்கிருந்த குருவிடம் அவர் சென்று தன்னைச் சீடனாக ஏற்குமாறு கேட்டதோடு, விழிப்புணர்வை அதிகரிக்கும் கல்வியைத் தனக்குப் புகட்டுமாறும் வேண்டினார். அதற்கு குரு, இது கடினம், ஆனால், உண்மையிலேயே விழிப்புணர்வை நீ அதிகரிக்க விரும்பினால் சிலவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார். சீடரும் அதற்கு ஒப்புக் கொண்டார். குரு தந்த பலதரப்பட்ட பயிற்சிகளில், அச்சீடர் நாள் முழுவதும் விழிப்புடன் இருக்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் குரு சீடரிடம், நீ உன்னுடைய இலக்கை அடைந்துவிட்டாய், அதனால் இப்போது வாழ்வில் மற்ற வேலைகளுக்கு நீ செல்லலாம் என்று சொன்னார். இதில் மகிழ்வடைந்த சீடர் ஆசிரமத்தைவிட்டுச் செல்வதற்கு முன்னர், அந்தக் குருவின் விழிப்புணர்வைப் பரிசோதித்துப் பார்க்க எண்ணினார். அந்நேரமே சீடரின் எதிரே வந்துகொண்டிருந்தார் குரு. சரி, இந்தக் கல்லை எடுத்து குருவின்மீது எறிந்து அவரின் விழிப்புணர்வைப் பார்க்கிறேன் என்று எண்ணினார் சீடர். எப்போது சீடர் இவ்வாறு சிந்தித்தாரோ அப்போதே குரு சீடரிடம், இதோ பார், எனக்கு வயதாகிவிட்டது, நீ என்மீது கல் எறிந்தால் ஒருவேளை என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது, அதனால் என்மீது கல் எறியும் எண்ணத்தை உன் மனதில் கொண்டு வராதே என்று சொன்னார். இதைக் கேட்டு திடுக்கிட்ட சீடர் குருவின் கால்களைப் பற்றிக்கொண்டு, ஐயனே, நான் மேலும் பயிற்சி பெற விரும்புகிறேன், பிறர் எண்ணங்களை அறிவதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அப்போது குரு சீடரிடம், இதற்கு முதலில் நீ உன்னுடைய எண்ணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும், உன்னுடைய எண்ணங்கள் மீது முழுமையான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சொன்னார்.

விழிப்புணர்வு என்பது அறிவை விழிப்புடன் இருக்கச் செய்வதாகும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.