2015-05-09 15:50:00

கிறிஸ்தவர்,யூதர்களின் ஒன்றிணைந்த சாட்சிய வாழ்வுக்கு அழைப்பு


மே,09,2015. இஸ்ரேலின் கலிலி நகரில் நடைபெற்ற பெரிய பல்சமய கூட்டத்தினருக்குத் திருப்பலி நிறைவேற்றிய, திருப்பீட பொருளாதாரச் செயலகத்தின் தலைவர் கர்தினால் ஜார்ஜ் பெல் அவர்கள், கிறிஸ்தவர்களும் யூதர்களும் வருங்காலத் தலைமுறைகளுக்கு ஒன்றிணைந்து சாட்சி பகருமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க மூன்று நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட கிறிஸ்தவ மற்றும்  யூதமதப் பிரதிநிதிகளின் முயற்சிகளைப் பாராட்டிய கர்தினால் பெல் அவர்கள்,  உண்மை மற்றும் வாழ்வின் வழிகளை இழந்ததுபோல் காணப்படும் இக்காலத் தலைமுறைகளுக்கு நாம் ஆற்ற வேண்டிய பெரும் பணி உள்ளது என்றும் கூறினார்.

இக்கூட்டத்தை ஏற்பாடு செய்த Neocatechumenal Way என்ற பக்த அமைப்பு பல நாடுகளில் ஆற்றிவரும் நற்செய்தி அறிவிப்புப் பணிகளையும் குறிப்பிட்ட கர்தினால் பெல் அவர்கள், நம் பணிகளை மேலும் நாம் நடத்திச் செல்வதற்குத் தூய ஆவியாரின் உதவியைக் கேட்போம் என்றும் கூறினார்.

இத்திருப்பலியில் யூதமத ரபிகள் பங்கேற்வில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.