2015-05-09 15:55:00

ஈக்குவதோர், பொலிவியா,பராகுவாய் நாடுகளில் திருத்தந்தை


மே,09,2015. ஈக்குவதோர், பொலிவியா, பராகுவாய் ஆகிய மூன்று தென் அமெரிக்க நாடுகளுக்கு வருகிற ஜூலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயண விபரங்கள் இவ்வெள்ளியன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வருகிற ஜூலை 5ம் தேதி உரோம் Fiumicino பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஈக்குவதோர் நாட்டுக்குப் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈக்குவதோர் நாட்டின் Guayaquil இறைஇரக்கம் திருத்தலத்துக்கு முதலில் செல்வார். 8ம் தேதி அந்நாட்டைவிட்டுப் புறப்படுவதற்கு முன்னர், அரசுத்லைவர், அரசு அதிகாரிகள் மற்றும் துறவறத்தாரைச் சந்திப்பார், திறந்தவெளி வளாகத்தில் இரு திருப்பலிகளை நிறைவேற்றுவார், பிறரன்பு மறைபோதக சபையினர் நடத்தும் வயதானவர் இல்லம் செல்வார் மற்றும் இளையோரையும் சந்திப்பார் திருத்தந்தை.

ஈக்குவதோரிலிருந்து, பொலிவியா செல்லும் திருத்தந்தை, தலைநகர் La Pazல்  அரசுத்லைவர் மற்றும் அரசு அதிகாரிகளைச் சந்தித்த பின்னர், கிழக்கு பொலிவியாவிலுள்ள, உலகில் மிக வேகமாக வளரும் நகரங்களில் ஒன்றாகிய Santa Cruz de la Sierra செல்வார். அங்கு, பக்த இயக்கங்களின் உலகக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றுவார். ஒரு மறுவாழ்வு மையத்தையும் பார்வையிடுவார் திருத்தந்தை.

ஜூலை 10ம் தேதி பொலிவியாவிலிருந்து, பராகுவாய் செல்லும் திருத்தந்தை, தலைநகர்  Asunciónல் அரசுத்லைவர், தூதரக அதிகாரிகள், இளையோர் என சந்திப்புக்களை நடத்துவார். சிறார் மருத்துவமனைக்குச் செல்லும் அவர், பராகுவாய் நதியின் அண்மை வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திப்பார்.

ஜூலை 12 ஞாயிறு மாலை பராகுவாய் நாட்டிலிருந்து புறப்பட்டு, 13ம் தேதி காலை 7.45 மணியளவில் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.