2015-05-06 16:30:00

வெனிஸ் நகரில் நடைபெறும் கண்காட்சியில், வத்திக்கான் அரங்கம்


மே,06,2015. மே 9ம் தேதி, வருகிற சனிக்கிழமை முதல், நவம்பர் 22ம் தேதி முடிய, இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெறும் 56வது அகில உலக கலைக் கண்காட்சியில் வத்திக்கான் அரங்கம் ஒன்று இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"உலகனைத்தின் எதிர்காலங்கள்" (“All the World's Futures”) என்ற தலைப்புடன் துவங்கவுள்ள இந்தக் கண்காட்சியில் 90க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்கின்றன என்றும், 56வது முறையாக நடைபெறும் இக்கண்காட்சியில் இரண்டாவது முறையாக வத்திக்கான் கலந்துகொள்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1895ம் ஆண்டுமுதல், ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தக் கலைக் கண்காட்சியில், 2013ம் ஆண்டு, வத்திக்கான், முதல் முறையாகப் பங்கேற்றபோது, தொடக்க நூலின் முதல் 11 பிரிவுகள் ஓவியங்களாக இடம்பெற்றன.

இவ்வாண்டு நடைபெறும் 56வது அகில உலக கலைக் கண்காட்சியில், யோவான் நற்செய்தியின் முதல் பிரிவை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஓவியங்கள், வத்திக்கான் அரங்கத்தில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.