2015-05-06 16:46:00

நற்செய்தியை அறிவிப்பது, மத மாற்றம் செய்வது அல்ல


மே,06,2015. நற்செய்தியை அறிவிப்பதே கத்தோலிக்கத் திருஅவையின் முக்கியப் பணியே அன்றி, மத மாற்றம் செய்வது அல்ல என்று சீரோ மலபார் திருஅவையின் தலைவர், கர்தினால் மார் ஜார்ஜ் அலஞ்சேரி அவர்கள் கூறினார்.

மே மாதம் 5ம் தேதி முடிய கர்நாடகா மாநிலத்தின் பெத்லங்காடி மறைமாவட்டத்தில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட கர்தினால் அலஞ்சேரி அவர்கள், மதம் விட்டு மதம் மாறும் முடிவு தனிப்பட்ட மனிதர்களின் பொறுப்பே அன்றி, அம்முடிவை யார் மீதும் திணிக்கமுடியாது என்று எடுத்துரைத்தார்.

இந்தியாவில் கத்தோலிக்கத் திருஅவை மேற்கொண்டுவரும் பல்வேறு பணிகளை, மதமாற்றப் பணிகள் என்ற தவறானப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர், அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளனர் என்று கர்தினால் அலஞ்சேரி அவர்கள், கவலை வெளியிட்டார்.

நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மத்தியில் பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா அரசின் ஓராண்டு கால ஆட்சியில், கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களும், கிறிஸ்தவ சமுதாயமும் பல வன்முறைகளைச் சந்தித்துள்ளன என்றும் கர்தினால் அலஞ்சேரி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கர்தினால் அலஞ்சேரி அவர்களின் இந்தப் பயணத்தின்போது, அமைதியை விரும்பும் பல இந்து மதத் தலைவர்களையும், இஸ்லாமியத் தலைவர்களையும் சந்தித்தார் என்று இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.

ஆதாரம் : TOI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.