2015-05-06 16:13:00

கியூபாவின் அரசுத் தலைவர் திருத்தந்தையைச் சந்திப்பார்


மே,06,2015. மே 10ம் தேதி, வருகிற ஞாயிற்றுக்கிழமை, கியூபாவின் அரசுத் தலைவர், இரவுல் காஸ்ட்ரோ (Raul Castro) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, மிகவும் தனிப்பட்ட முறையில் வத்திக்கானில் சந்திப்பார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், அருள்பணி பெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள் இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், கியூபாவுக்கும் இடையே உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்படுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை, அரசுத் தலைவர் காஸ்ட்ரோ அவர்கள், வெளிப்படையாகப் பாராட்டியுள்ளதை, அருள்பணி லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

அதேவண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற செப்டம்பர் மாதம், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் வழியில், கியூபாவிற்குச் செல்வதைக் குறித்தும், அருள்பணி லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு நினைவுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.