2015-05-02 15:05:00

கடுகு சிறுத்தாலும்: எல்லையற்ற ஏக்கமே... நரகம்


மரத்தில் இருந்த இலைக்கு 'போர்' அடித்தது. எத்தனை நாள்தான் இந்த மரத்திலேயே தொங்கிக்கொண்டிருப்பது என்ற சலிப்பு அதற்கு. வானத்தில் சிறகடித்துப் பறந்த பறவைகளைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட்டது. இலையின் ஏக்கம், எரிச்சலாக மாறியது. இந்தப் பாழாய்போன மரத்திலிருந்து எப்போதுதான் எனக்கு விடுதலை கிடைக்குமோ என்று புலம்பித் தீர்த்தது.

இலை, ஏங்கிக் காத்திருந்த அந்த விடுதலை நாள் வந்தது, இலையுதிர் காலத்தின் வடிவில். மரத்திலிருந்து இலை விடுதலை பெற்றது. விடுபட்ட இலை, தன்னை இதுவரைத் தாங்கி, வளர்த்துவந்த மரத்திற்கு விடைகூடச் சொல்லாமல், வீசியத் தென்றலில் மிதந்து சென்றது. பறவையைப் போல தானும் பறக்க முடிகிறதே என்று இலைக்கு நிலைகொள்ளா மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி ஒரு சில நொடிகளே நீடித்தது.

உதிர்ந்த இலை, இறுதியில் தரையில் விழுந்தது. எப்படி முயன்றாலும் அதனால் மீண்டும் பறக்க முடியவில்லை. தரையோடு வீசிய காற்று புழுதியை அதன் மீது கொட்டியது. காய்ந்து விழுந்த மற்ற இலைகள் அதன் மீது விழுந்து மூடின. மனிதர்கள் அதனை மிதித்துச் சென்றனர். இலைக்கு மூச்சுத் திணறியது.

கண்களில் நீர் பொங்க அண்ணாந்து பார்த்தது இலை. தான் வாழ்ந்த மரக்கிளையில் மற்ற இலைகள் தென்றலில் அசைந்தாடியது, தன்னைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பதைப்போல் இருந்தது. "நான் அங்கேயே தங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்ற ஏக்கம் இலையைச் சூழ்ந்தது.

மரத்தில் இருந்தபோதும் ஏக்கம்… தரையில் வீழ்ந்தபோதும் ஏக்கம்

"இயல்பே இன்பம், ஏக்கம் நரகம்" - கவிஞர் வைரமுத்து

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.