2015-04-27 15:38:00

கடுகு சிறுத்தாலும் – பணத்தால் மாறும் குணம்


அன்று ஆற்றங்கரையோரமாய் நடந்து கொண்டிருந்த ஒருவரின் சட்டைப் பையிலிருந்து ஒரு ரூபாய் நாணயம் ஒன்று தவறி கீழே விழுந்தது. அது அந்த இடத்தில் இருந்த தவளையின் மீது விழுந்தது. உடனே அந்த நாணயத்தை எடுத்துக்கொண்டு ஆனந்தமாய்த் துள்ளிக் குதித்து ஆடியது அந்தத் தவளை. அந்நேரத்தில் அவ்வழியாக வந்த யானை ஒன்று, தவளையைக் கண்டுகொள்ளாமல் தாண்டிச் சென்றது. இதைப் பார்த்த தவளைக்குக் கடுங்கோபம் வரவே, யானையே, என்னைப் பார்க்காமல் போகிறாயே, உனக்கு அவ்வளவு ஆணவமா? என்று கேட்டது. தவளையின் அன்றைய நடத்தை யானைக்கு வியப்பாக இருந்தது. என்னைக் கண்டாலே விலகி ஓடும் தவளை இன்று இவ்வளவு தலைக்கனத்துடன் பேசுகிறதே என்று நினைத்து கீழே குனிந்து பார்த்தது யானை. ஒரு ரூபாய் நாணயம் ஒன்று தவளைக்கு அருகில் இருந்ததைக் கண்டது. ஓஹோ... இதுதான் தவளையின் கர்வத்துக்குக் காரணமா என்று நினைத்து, தவளையே, இந்த நாணயம் உனக்குக் கிடைத்ததால்தான் இப்படிப் பேசுகிறாயோ? என்று சொல்லிச் சென்றது யானை. மனிதரிடமிருந்து பணத்தைப் பிரிப்பது குணம். மனிதரிடமிருந்து குணத்தைப் பிரிப்பது பணம். பணம் மாற்றுகிறதா குணத்தை! இல்லை, குணம் மாறுகிறதா பணத்தால்! 

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.