2015-04-25 15:09:00

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்க்குத் திருத்தந்தை செபம்


ஏப்.25,2015. நேபாள நாட்டின் தலைநகர் காட்மாண்டுவில் இச்சனிக்கிழமை காலையில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது செபத்தையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார்.

இப்பேரிடர் குறித்து தான் ஆழ்ந்த கவலையடைந்திருப்பதாகவும், இதில் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களில் தானும் பங்குகொள்வதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

7.9 ரிக்டர் அளவுகோலில், ஒன்றரை நிமிடங்களுக்கு மேல் இடம்பெற்ற  நிலநடுக்கத்தால் காட்மாண்டுவில் பல இடங்களில் கட்டடங்கள் இடிந்துள்ளன மற்றும் 700க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

நேபாளத்தில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு, இந்தியாவின் ராஞ்சி, ஜெய்ப்பூர், கௌஹாத்தி, உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளிலும், சிக்கிம், பிஹார் மாநிலங்களிலும், பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் உணரப்பட்டது.

உள்ளூர் நேரப்படி காலை 11.56க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காட்மண்டுவிலிருந்து வடமேற்கில் 83 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக காட்மாண்டு விமானநிலையம் மூடப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு 6.2 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. இதன் பாதிப்பும் நேபாளத்திலும் வட இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.