2015-04-23 16:21:00

திருத்தந்தையால் திருநிலைப்படுத்தப்படும் 19 தியாக்கோன்கள்


ஏப்.23,2015. ஏப்ரல் 26, வருகிற ஞாயிறன்று, நல்லாயன் ஞாயிறும், இறையழைத்தலுக்காக செபிக்கும் 52வது உலக நாளும் சிறப்பிக்கப்படும் வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 19 தியாக்கோன்களை அருள் பணியாளர்களாகத் திருநிலைப்படுத்துவார் என்று உரோமை மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 26, காலை 9.30 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நடைபெறும் திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநிலைப்படுத்தும் திருச்சடங்கினை முன்னின்று நடத்துவார்.

திருநிலைப்படுத்தப்படும் 19 இளையோரில், 13 தியாக்கோன்கள், உரோம் மறைமாவட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்; ஏனைய 6 பேரில், இருவர், மடகாஸ்கரிலிருந்தும், இருவர் தென் அமெரிக்காவின் பேரு நாட்டிலிருந்தும், ஒருவர் குரோவேசியாவிலிருந்தும் மற்றவர், இந்தியாவிலிருந்தும் திருத்தந்தையால் திருநிலைப்படுத்தப்படுவர்.

ஞாயிறன்று கொண்டாடப்படும் இறையழைத்தலுக்காக செபிக்கும் 52வது உலக நாளையொட்டி, ஏப்ரல் 24, வெள்ளி மாலை, புனித இலாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் திருவிழிப்புச் செபவழிபாடு நடத்தப்படும் என்று உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

மேலும், திருநிலைப்படுத்தப்படும் அருள் பணியாளர்கள், 28 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்ற விவரத்தையும் உரோம் மறைமாவட்டம் வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.