2015-04-23 16:31:00

உரையாடலுக்கு நிச்சயமாக வாய்ப்பு உள்ளது - திருப்பீட அவை


ஏப்.23,2015. நம்மைச் சுற்றி அண்மைக் காலமாக நிகழும் வன்முறைகளைக் காணும்போது, உரையாடலுக்கு இனியும் வாய்ப்பு உள்ளதா என்று எழும் கேள்விக்கு, நிச்சயமாக வாய்ப்பு உள்ளது என்பதே உண்மை என்று திருப்பீடம் வெளியிட்டச் சேதியொன்று கூறுகிறது.

நிகழும் வன்முறைகளை, பெரும்பாலான இஸ்லாமியர் கண்டனம் செய்துவருவது, உரையாடலை வளர்க்க அவர்கள் கொண்டிருக்கும் ஆவலை வெளிப்படுத்துகிறது என்று பல்சமய உரையாடல் திருப்பீட அவை, இப்புதனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பட்டுள்ளது.

'மதம்' என்ற வார்த்தை, 'வன்முறை' என்ற வார்த்தையுடன் அடையாளப்படுத்தப்படும் இன்றையச் சூழலில், உண்மையான மத நம்பிக்கை கொண்டவர்கள், அமைதியின் தூதர்களாகப் பணியாற்றும் கடமை எழுந்துள்ளது என்று இச்செய்தி வலியுறுத்துகிறது.

மதத்தின் பெயரால் கொலை செய்வது, கடவுளுக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல; அது மனித குலத்தைத் தோல்வியடையச் செய்யும் முயற்சி என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், மதத்தின் பெயரால், வன்முறைகளை நியாயப்படுத்தும் முயற்சிகளை வன்மையாகக் கண்டனம் செய்யவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கூறியிருக்கும் கருத்துக்கள், இச்செய்தியில் இடம் பெற்றுள்ளன.

ஆதாரம் : VIS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.