2015-04-01 16:02:00

புனித ஆண்டு ஆணை ஓலை ஏப்ரல் 11ம் தேதி வெளியிடப்படும்


ஏப்,01,2015. இறை இரக்கத்தின் புனித ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் அதிகாரப்பூர்வ ஆணை ஓலை (Papal Bull), ஏப்ரல் 11ம் தேதி, சனிக்கிழமையன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்புனித ஆண்டு குறித்து திருத்தந்தை வழங்கும் அதிகாரப்பூர்வ ஆணை ஓலையின் சில பகுதிகள், ஏப்ரல் 11ம் தேதி, இறை இரக்கத்தின் ஞாயிறுக்கு முந்திய நாள் மாலை நடைபெறும் மாலை வழிபாட்டுக்கு முன், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் புனிதக் கதவுக்கு முன் வாசிக்கப்படும்.

மார்ச் 13ம் தேதி, வெள்ளிக்கிழமை, திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு நிறைவுநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் தலைமையேற்று நடத்திய ஒப்புரவு அருள் அடையாள கொண்டாட்டத்தின்போது வழங்கிய மறையுரையில், இறை இரக்கத்தின் புனித ஆண்டைக் குறித்து முதன்முறையாகக் குறிப்பிட்டார்.

1300ம் ஆண்டு, திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்களால் முதன்முறையாக, புனித ஜுபிலி ஆண்டு அறிக்கைகள் ஆரம்பமாயின. இவ்வரிசையில், இறுதியாக, 2000மாம் ஆண்டு, கொண்டாடப்பட்ட புனித ஜுபிலி ஆண்டு, புனிதத் திருத்தந்தை, 2ம் ஜான்பால் அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இறைவனின் கருணை என்ற கருத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்துள்ள அதிகாரப்பூர்வ இலச்சனையிலும், அவரது பல உரைகளிலும் முக்கியமாக இடம்பெறும் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு போலந்து நாட்டின் கிரகோவ் நகரில் நடைபெறவிருக்கும் இளையோர் உலக நாள் நிகழ்வுகளின் மையக் கருத்தாக "இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்" என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்துள்ளார் என்பதும், குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்திருக்கும் இறை இரக்கத்தின் புனித ஆண்டு, இவ்வாண்டு டிசம்பர் 8ம் தேதி, அமல அன்னை மரியாவின் திருநாளன்று துவங்கி, அடுத்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி முடிய கொண்டாடப்படும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.