2015-03-28 15:35:00

முதுபெரும் தந்தை Dinkha, ஞானமுள்ள, துணிவுள்ள மேய்ப்பர்


மார்ச்,28,2015.  அசீரிய கீழை வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை நான்காம் Mar Dinkha அவர்கள் உயிரிழந்ததையொட்டி, கிழக்கின் அசீரியத் திருஅவை முதுபெரும் தந்தை Mar Aprem Locum Tenens அவர்களுக்கு இரங்கல் தந்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அசீரியத் திருஅவையினர் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, முதுபெரும் தந்தை Mar Dinkha அவர்கள், அதிகச் சவால்கள் நிறைந்த காலக்கட்டத்தில் தனது சமூகத்தை ஞானத்துடனும் துணிச்சலுடனும் வழிநடத்திய மேய்ப்பர் என்று பாராட்டியுள்ளார்.

கிறிஸ்தவ உலகம் ஒரு முக்கியமான தலைவரை இழந்துள்ளது என்றும், மத்திய கிழக்கில், குறிப்பாக, ஈராக் மற்றும் சிரியாவில் ஒவ்வொரு நாளும் அடக்குமுறைகளால் துன்புறும் கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் குறித்து முதுபெரும் தந்தை Mar Dinkha அவர்கள் அதிகமாகத் துன்புற்றார் என்றும் திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

79 வயது நிரம்பிய முதுபெரும் தந்தை கத்தோலிக்கோஸ் Mar Dinkha அவர்கள் இவ்வியாழனன்று மரணமடைந்தார். இவரது அடக்கச்சடங்கு வருகிற ஏப்ரல் 8ம் தேதி இடம்பெறும்.

மேலும், “கிறிஸ்துவின் சீடர்களாக இருக்கும் நாம், மிகவும் நலிந்தவர்களின்  நன்மை குறித்து எப்படி அக்கறை கொள்ளாதிருக்க முடியும்?” என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.