2015-03-28 16:03:00

பயங்கரவாதிகளை ஆதரிப்போருக்கு எதிராகச் சட்டங்கள் அவசியம்


மார்ச்,28,2015. பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடுகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு அவையை கேட்டுக்கொண்டார் பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ.

ஈராக்கிலும், மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும் நசுக்கப்படும் கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் குறித்து, பிரான்ஸ் நாட்டின் முயற்சியால், இவ்வெள்ளியன்று நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு அவையில் உரையாற்றிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் இவ்வாறு வலியுறுத்தினார்.

பயங்கரவாதத்தை எதிர்க்கும் புனித நூல்கள் குறித்த சீர்திருத்த கல்விக்கு ஆதரவான நடவடிக்கைகள் தேவை என்று கேட்டுக்கொண்ட முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஈராக் மற்றும் குர்திஸ்தான் அதிகாரிகளுக்கு ஆதரவாக அனைத்துலக சமுதாயம் செயல்படும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.

அரபு வசந்தம் என்ற எழுச்சி, அமைதி, உறுதியான தன்மை, முன்னேற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தாமல், ஈராக் மக்கள்மீது எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார் முதுபெரும் தந்தை சாக்கோ.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.