2015-03-27 15:02:00

திருத்தந்தைக்கு வெள்ளைமாளிகையில் செப்டம்பர் 23ல் வரவேற்பு


மார்ச்,27,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பாரக் ஒபாமா, அமெரிக்க முதல் பெண்மணி மிஷேல் ஒபாமா ஆகிய இருவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வருகிற செப்டம்பர் 23ம் தேதியன்று வெள்ளை மாளிகையில் வரவேற்பார்கள் என்று வெள்ளை மாளிகையின் செய்தி அலுவலகம் இவ்வியாழனன்று அறிவித்தது.

இச்சந்திப்பின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அரசுத்தலைவர் ஒபாமா அவர்களும் தங்களின் பொதுவான அர்ப்பணங்கள் மற்றும் விழுமியங்கள் குறித்து கலந்துரையாடுவார்கள் என்றும் அந்த அலுவலகம் அறிவித்தது.

ஒதுக்கப்பட்டோரையும், ஏழைகளையும் பராமரித்தல், பொருளாதார முன்னேற்ற வாய்ப்புக்களை அனைவருக்கும் வழங்குதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், உலகில் சமய சுதந்திரத்தை ஊக்குவித்து சிறுபான்மை மதத்தவரைப் பாதுகாத்தல், குடியேற்றதாரரையும், புலம்பெயர்ந்தோரையும் வரவேற்றல் போன்ற விவகாரங்கள் இந்த உரையாடலில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அரசுத்தலைவர் ஒபாமா அவர்கள் வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபோது மேற்கொண்ட உரையாடல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் திருத்தூதுப் பயணத்தின்போதும் தொடரவிருப்பதை அரசுத்தலைவர் ஒபாமா அவர்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற செப்டம்பரில் பிலடெல்ஃபியாவில் நடைபெறவிருக்கும் உலகக் கத்தோலிக்கக் குடும்பங்கள் மாநாட்டுக்குச் செல்லும் திருத்தந்தை, வெள்ளை மாளிகைக்கும் செல்கிறார். செப்டம்பர் 24ம் தேதி அமெரிக்க காங்கிரஸ் அவையிலும் உரையாற்றுகிறார் திருத்தந்தை. இந்நிகழ்வு, திருத்தந்தையர் வரலாற்றில் முதன்முறையாக இடம்பெறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.