2015-03-25 15:30:00

விமான விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் தந்தி


மார்ச்,25,2015. விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்கள் அனுபவித்துவரும் துயரத்தில் தான் இணைவதாகக் கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Digne ஆயர் Jean-Philippe Nault அவர்களுக்கு, அனுதாபத் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.

ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியில், மார்ச் 24, இச்செவ்வாயன்று நிகழ்ந்த விபத்தில் உயிர் துறந்தோருக்கு தன் செபங்களையும், உறவினரை இழந்த குடும்பங்களுக்கு தன் ஆறுதலையும் வெளியிட்டுள்ள திருத்தந்தையின் தந்தியை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பிவைத்தார்.

42 இஸ்பானிய குடிமக்கள் உட்பட, 148 பேர் பலியான இந்த விமான விபத்தையொட்டி, பார்சலோனா பேராயர் கர்தினால் Lluís Martínez Sistach அவர்கள், Digne ஆயருக்கு தந்தியொன்றை அனுப்பியதுடன், தன் மறைமாவட்ட மக்கள் அனைவரும், அடுத்துவரும் நாட்களில் இறந்தோர், மற்றும் துயருறுவோர் அனைவருக்கும் செபங்களையும், திருப்பலிகளையும் ஒப்புக்கொடுக்குமாறு விண்ணப்பித்துள்ளார்.

மேலும், பிரான்ஸ் ஆயர்கள் பேரவையின் தலைவரும், Marseille பேராயருமான Georges Pontier அவர்கள், Digne ஆயர் Nault அவர்களுக்கு அனுதாபத் தந்தியை அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.