2015-03-25 15:50:00

கிறிஸ்தவர்களைத் தாக்குவோர், உண்மையான இந்துக்கள் அல்ல


மார்ச்,25,2015. கிறிஸ்தவர்களையும், அவர்கள் நடத்தும் நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றைத் தாக்குவோர், உண்மையான இந்துக்கள் கிடையாது என்று இந்திய கர்தினால், ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

பொறுமையும், சகிப்புத் தன்மையும் கொண்ட இந்தியப் பண்பாட்டை, உலகினர் கண்களில் களங்கப்படுத்தும் இந்த வன்முறையாளர்கள், உலக அரங்கில் நம்மைத் தலைகுனியச் செய்கின்றனர் என்று மும்பைப் பேராயர் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் இந்திய ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.

கடந்த சனிக்கிழமை, நவி மும்பையில் உள்ள கத்தோலிக்கக் கோவில் தாக்கப்பட்டது, அதற்கு முன்னதாக, வங்காளத்தில் ஒரு அருள் சகோதரி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது ஆகிய நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, கர்தினால் கிரேசியஸ் தன் கருத்துக்களை வெளியிட்டார்.

மத்தியில் ஆட்சி  செய்யும் பாரதீய ஜனதா கட்சி, கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஒரு கட்சியென்று சொல்வதற்கில்லை எனினும், அது ஆட்சிக்கு வந்தபின்னர், தாக்குதல்கள் பெருகியுள்ளன என்பதையும் மறுக்க இயலாது என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

சிறுபான்மையினரைப் பாதுகாப்பதாக பிரதமர் வாக்களித்திருப்பது வெளிப்படையான விடயம் என்றாலும், அவரது வாக்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவதைக் காண கிறிஸ்தவர்கள் காத்திருக்கின்றனர் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : NDTV / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.