2015-03-25 14:23:00

கடுகு சிறுத்தாலும்... : ந‌மக்கு வரும்வரை, வ‌லி புரிவ‌தில்லை


ஒருமுறை செல்வந்தர் ஒருவரின் வீட்டின் தொலைபேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது.

'நான் நம்ம வீட்டு தொலைபேசியை பயன்படுத்துவதே இல்லை. எல்லாவற்றிற்கும் அலுவலத் தொலைபேசியைத்தான் பயன்படுத்துவேன். ஆனாலும் இவ்வளவு தொகை வந்திருக்கு. யார் இதற்கு காரணம்?' என்று யோசித்துக் கொண்டு  தன் மனைவியிடம் கேட்டார் குடும்பத் த‌லைவ‌ர்.

 'நானும் அலுவலகத் தொலைபேசியை மட்டுமே பயன்படுத்துகிறேன். எனக்குத் தெரியாது' என்று அவர் மனைவியும் கூறிவிட்டு, மகனிடம் கேட்குமாறு கூறினார்.

’நான் வீட்டு தொலைபேசியைத் தொடுவதே இல்லை. எனக்கு அலுவலகம் கொடுத்திருக்கும் கைத்தொலைபேசியில்தான், நண்பர்களிடம்கூட பேசுவேன் என்றார் மகன்.

‘நாம் யாரும் பயன்படுத்தலைன்னா எப்படி இவ்வளவு கட்டணம் வந்துள்ளது’ என தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அந்த வீட்டு வேலைக்காரரோ, 'ஐயா, நானும் உங்களைப்போல் எப்போதும் நான்  வேலை செய்யும் இடத்திலுள்ள என்னோட அலுவலகத் தொலைபேசி மட்டுமே பயன்படுத்துகிறேன்' என்றார்.

அந்தக் குடும்ப உறுப்பினர்கள் செய்வதைத்தான் அவரும் செய்திருக்கிறார்.

சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்குப் புரிவதே இல்லை, வேறொருவர் நமக்கு அதை செய்யும் வரை...! 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.