2015-03-20 15:40:00

லாகூரில் முஸ்லிம்களின் கொலைக்கு கிறிஸ்தவர்கள் மன்னிப்பு


மார்ச்,20,2015. பாகிஸ்தானில் இரு கிறிஸ்தவ ஆலயங்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய குற்றத்தில் சந்தேகிக்கப்பட்ட இரு முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுள்ளனர் அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைத் தலைவர்கள்.

லாகூர் புறநகர்ப் பகுதியிலுள்ள Youhanabadல் இரு கிறிஸ்தவ ஆலயங்களில் கடந்த ஞாயிறன்று திருவழிபாடுகள் நடந்துகொண்டிருந்தபோது இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் ஏழு முஸ்லிம்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தப் பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து லாகூர் வீதிகளில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன. இதில் ஆயுதங்களை வைத்திருந்த இரு முஸ்லிம்களை காவல்துறை கைது செய்தது. எனினும், அத்தாக்குதல்களில் இந்த இருவரும் ஈடுபட்டனர் என்று நினைத்த போராட்டதாரர்கள், அந்த மனிதர்களை இழுத்து அடித்து உயிரோடு எரித்தனர். ஆனால் இவ்விருவரும் அப்பாவிகள் என்று பின்னர் தெரிய வந்துள்ளது.

கிறிஸ்தவ சமூகத்தின் இந்தச் செயலுக்கு மன்னிப்புக் கேட்டுள்ள பாகிஸ்தான் தேசிய நீதி மற்றும் அமைதி ஆணைக்குழுவின் இயக்குனர் அருள்பணி Emmanuel Yousaf Mani அவர்கள், போதகர்களாகிய தாங்கள் அமைதிக்காகச் செபிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.  

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.