2015-03-20 15:55:00

அனைத்துலக காடுகள் தினம், ஐ.நா. பொதுச் செயலரின் செய்தி


மார்ச்,20,2015. வெப்பநிலை மாறுதலை ஏற்கக்கூடிய ஓர் உறுதியான வருங்காலத்தை கட்டியெழுப்பவேண்டுமெனில் உலகின் காடுகளைப் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும், இதற்கு உயர்மட்ட அளவில் அரசுகளின் அர்ப்பணம் அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.

மார்ச்,21 இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக காடுகள் தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள பான் கி மூன் அவர்கள், அனைத்து வகையான காடுகள் மற்றும் காடுகளுக்கு வெளியேயுள்ள அனைத்து மரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த உலக நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின கலாச்சாரங்கள் உட்பட ஏறக்குறைய 160 கோடி மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களுக்கு காடுகளைச் சார்ந்துள்ளனர் என்றும், உலக அளவில் கிடைக்கும் நல்ல தண்ணீரில் நான்கில் மூன்று பகுதி, காடுகளிலுள்ள ஆற்றுநீரிலிருந்து கிடைக்கின்றன என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.

நிலச்சரிவு, மண்அரிப்பு, சுனாமிகளால் ஏற்படும் சேதங்கள் போன்றவற்றை காடுகள் தடுக்கின்றன என்றுரைத்த பான் கி மூன் அவர்கள், காடுகளைப் பாதுகாப்பதற்கு அரசுகளின் உயர்மட்ட அளவில் கொள்கைகளும், சட்டங்களும் உருவாக்கப்பட்டு ஒன்றிணைந்த கூட்டு முயற்சிகள் ஊக்கவிக்கப்படுமாறும் பரிந்துரைத்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளில் உலக அளவில் காடுகள் அழிவு ஏறக்குறைய 20 விழுக்காடு குறைந்துள்ளதையும் பான் கி மூன் அவர்களின் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.