2015-03-19 16:06:00

வறிய குடும்பங்களுக்கு திருத்தந்தை வழங்கும் 500 கிலோ உணவு


மார்ச்,19,2015. தங்கள் பகுதியில் வாழும் வறிய குடும்பங்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உணவுப் பொருள்களை அனுப்பியுள்ளார் என்ற செய்தி எங்களுக்கு ஆனந்த அதிர்ச்சியைத் தந்தது என்று, உரோம் நகரில் உள்ள ஒரு பிறரன்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 8, ஞாயிறன்று மேய்ப்புப்பணி பயணமாகச் சென்ற Tor Bella Monaca பகுதியில் உள்ள மக்களுக்கு 500 கிலோ கிராம் உணவுப் பொருள்களை, அவரது தர்மச் செயல்களுக்குப் பொறுப்பாகப் பணியாற்றும் பேராயர் Konrad Krajewski வழியாக அனுப்பியுள்ளார்.

திருத்தந்தை, தன் பயணத்தோடு எங்களை மறந்துவிடாமல், தொடர்ந்து தன் அன்பை வெளிப்படுத்துவது, எங்களுக்குப் பெரும் ஊக்கமாக அமைகிறது என்று, அப்பகுதியில் பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள Medicina Solidale என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், Lucia Ercoli அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் அறிவித்த இறை இரக்கத்தின் புனித ஆண்டுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக இச்செயல் அமைந்துள்ளது என்று Ercoli அவர்கள் எடுத்துரைத்தார்.

திருத்தந்தை அனுப்பியுள்ள இந்த உணவுப் பொருள்கள், அப்பகுதியில், வருகிற சனிக்கிழமையன்று, வறியோருக்கு வழங்கப்பட உள்ளன.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.