2015-03-19 16:27:00

லெபனான் எல்லைகள் மூடப்பட்டதால், சிரியா மக்கள் தவிப்பு


மார்ச்,19,2015. சிரியாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோருக்கு இதுவரை அடைக்கலம் தந்த லெபனான் நாடு, தன் எல்லைகளை மூடிவிட்டதென்ற செய்தி மிகுந்த கவலையை அளிக்கிறது என்று கிரேக்க மெல்கத்திய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, மூன்றாம் கிரகரி லஹாம் (Gregory III Laham) அவர்கள் கூறியுள்ளார்.

லெபனான் நாடு அருகில் இருப்பதால், அங்கு தப்பித்துச் செல்லும் கிறிஸ்தவர்கள், என்றாவது ஒருநாள் மீண்டும் சிரியாவில் நுழையலாம் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்தனர் என்றும், லெபனான் நாட்டின் இந்த முடிவு, அவர்கள் நம்பிக்கையை பெருமளவு குலைத்துள்ளது என்றும், முதுபெரும் தந்தை லஹாம் அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

சிரியாவில் நிலவும் போரைத் தீர்ப்பதற்கு, வெளிநாட்டு இராணுவங்களின் உதவியைத் தேடுவது தகுந்த தீர்வு அல்ல என்றும், போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் உரையாடல் வழியாக மட்டுமே போரை முடிவுக்குக் கொணரமுடியும் என்றும் முதுபெரும் தந்தை லஹாம் எடுத்துரைத்தார்.

சிரியாவில் 2011ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெறும் உள்நாட்டுப் போரினால், இதுவரை 32 இலட்சம் மக்கள் பக்கத்து நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர், 76 இலட்சம் மக்கள் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்துள்ளனர் மற்றும், 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல்களை ஆசிய செய்தி நிறுவனம் வழங்கியுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.