2015-03-19 15:46:00

துனிசியா உயிர்பலிகள் அதிர்ச்சி தருகின்றன - கர்தினால் பரோலின்


மார்ச்,19,2015. இறை இரக்கத்தின் புனித ஆண்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள தருணத்தில், துனிசியாவில் நடைபெற்றுள்ள உயிர் பலிகள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

துனிசியாவின், தூனிஸ் நகரில் அமைந்துள்ள Bardo தேசிய அருங்காட்சியகத்தில் இப்புதனன்று நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில், 18 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 40க்கும் அதிகமானோர் காயமுற்றனர் என்றும், இவர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டுப் பயணிகள் என்றும் ஊடகங்கள் கூறிவருகின்றன.

இந்த வன்முறை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இத்தகைய மதியற்ற வன்முறைகள் விரைவில் முடிவுக்கு வர, அனைவரும் இறைவனை மன்றாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சமுதாயத்தில் வேரூன்றியிருக்கும் ஊழல்களைக் களைவதன் வழியே, உலகின் பல இடங்களில் வெடிக்கும் வன்முறைகளை நாம் முடிவுக்குக் கொணர முடியும் என்று கர்தினால் பரோலின் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள இறை இரக்கத்தின் புனித ஆண்டு, மனித சமுதாயத்தின் உள்ளத்தில் புரையோடிப் போயிருக்கும் காயங்களை ஆற்றும் என்ற நம்பிக்கையை, கர்தினால் பரோலின் அவர்கள் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.