2015-03-19 15:36:00

செப்டம்பர் 25ம் தேதி, ஐ.நா. அவையில் திருத்தந்தையின் உரை


மார்ச்,19,2015. வருகிற செப்டம்பர் 25ம் தேதி காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐக்கிய நாட்டுப் பொது அவையில் உரையாற்றுவார் என்ற செய்தியை, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

மார்ச் 18, இப்புதனன்று ஐ.நா. வெளியிட்ட ஓர் அறிக்கையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்களை முதலில் தனியாகச் சந்தித்துப் பேசுவார் என்றும், பின்னர், அவர் ஐ.நா. பொது அவையில் உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. அவை உருவாக்கப்பட்ட 70ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வாண்டில், உலக நாடுகள் அனைத்தும் சரியான முன்னேற்றம் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் சிந்தித்து வரும் வேளையில், திருத்தந்தையின் வருகை, அனைவருக்கும் ஓர் உந்து சக்தியாக அமையும் என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

திருத்தந்தை, முத்திப்பேறு பெற்ற ஆறாம் பால் அவர்கள், 1965ம் ஆண்டு ஐ.நா.அவையில் உரையாற்றிய முதல் திருத்தந்தை என்பதும், அந்த நிகழ்வின் 50ம் ஆண்டு நிறைவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐ.நா.வில் உரையாற்றச் செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

அதேபோல், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களின் பணிக்காலத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு ஏழுமுறை திருத்தூது பயணங்கள் மேற்கொண்டபோது, 1979, மற்றும் 1995 ஆகிய இரு ஆண்டுகள் ஐ.நா. அவையில் உரையாற்றியுள்ளார் என்பதும், முன்னாள் திருத்தந்தை, 16ம் பெனடிக்ட் அவர்கள் 2008ம் ஆண்டு ஐ.நா.அவையில் உரையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.