2015-03-13 14:57:00

பிரதமர் மோடி ஒன்றிணைந்த இலங்கையை அமைப்பதற்கு உதவ வேண்டும்


மார்ச்,13,2015. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இலங்கைப் பயணம், ஒன்றிணைந்த இலங்கையைக் கட்டியெழுப்ப உதவும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசஃப்.

இவ்வெள்ளி காலை 5.30 மணிக்கு இலங்கை சென்றடைந்து இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் பிரதமர் மோடி அவர்களின் பயணம் குறித்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றிய மன்னார் ஆயர் ஜோசஃப் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வும், தன்னாட்சி உரிமையும் கொண்டுள்ள ஓர் ஒன்றிணைந்த இலங்கையைக் கட்டியெழுப்ப இந்தியப் பிரதமரின் இப்பயணம் உதவும் என்ற தனது எதிர்பார்ப்பைத் தெரிவித்தார் மன்னார் ஆயர்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் உரிமை இழந்த மக்களாக உள்ளனர் எனும் எதார்த்தத்தை இந்தியப் பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், இந்தியா நீதிக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் ஆயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆழ்ந்த கலாச்சாரத்தைக் கொண்ட தமிழ் மக்கள் தொடர்ந்து உரிமைகள் இழந்த நிலையில் வாழ்ந்து வருவது, வேதனையாக உள்ளது என்பதை இந்தியப் பிரதமர் மனதில் உள்வாங்கி அதற்கேற்ற வகையில் தீர்வுக்கான வழியை முன்னெடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

நீதியின் அடிப்படையில், பல்லின மக்கள் ஒன்றாக சம உரிமையுடன் இந்தியாவில் வாழ்வதைப் போல இலங்கையிலும் ஆட்சியாளர்கள் நடைமுறைபடுத்த நரேந்திர மோடி அவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தானும், தமிழ்ச் சமூகமும் எதிர்பார்ப்பதாக மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார்.

நீடித்த அமைதியும், நிரந்தரமான அரசியல் தீர்வும் இலங்கையில் ஏற்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பும் நல்லெண்ணமும் இன்றியமையாதவை எனவும் அவர் கூறினார்.

இந்தியப் பிரதமர் தனது இலங்கை பயணத்தின்போது, யாழ்ப்பாணம், தலைமன்னார் உட்பட பல இடங்களுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.