2015-03-10 15:40:00

கல்வாரியில் இயேசுவின் இறுதி வார்த்தைகள் - பகுதி - 4


மரணத்தை நெருங்கிவிடும் மனிதர்கள் என்ன பேசுவார்கள்? நம்மில் யாரும் அந்த அனுபவத்தை இன்னும் அடையவில்லை என்பதால், அந்த நேரத்தைப்பற்றி யூகித்துதான் சொல்லமுடியும். நிச்சயம் அந்நேரத்தில் தேவையற்ற, சின்னச் சின்ன விடயங்களைப் பேசமாட்டார்கள். மறுவாழ்வின் நுழைவாசலில் நிற்பவர்கள், விடைபெறப்போகும் வாழ்க்கையிலிருந்து தாங்கள் அறிந்த உண்மைகளை, தங்கள் வாழ்வில் நிறைவேறாத ஏக்கங்களை, அதுவரைச் சொல்லத் தயங்கிய உண்மைகளை, உணர்வுகளைச் சொல்ல முயற்சி செய்வார்கள்.

மரணப்படுக்கையில் இருந்த மூவர் பெசிக்கொண்டதுதான் இன்றைய விவிலியத் தேடலின் மையச்சிந்தனை. இது சாதாரண மரணப்படுக்கை அல்ல. உடலாலும், உள்ளத்தாலும் வேதனையின் உச்சியை அடைந்த மூவரின் மரணப்படுக்கை. ஆம் அன்பர்களே, கல்வாரியில், சிலுவையில் அறையப்பட்டிருந்த மூவரைப் பற்றிதான் நான் குறிப்பிடுகிறேன்.

கல்வாரியில் நிகழ்ந்த சிலுவைச் சாவைப்பற்றி, நாம் பெரும்பாலும் கோவிலில், திருவழிபாடுகளில் சிந்தித்து வந்துள்ளதால், இந்தக் காட்சியைப்பற்றிய நம் எண்ணங்கள், சுத்தம் செய்யப்பட்ட கற்பனையாகவே இருக்கும். இயேசுவும் மற்றவர்களும் சொன்ன வார்த்தைகள், வெகு அமைதியாய், பக்தியாய் சொல்லப்பட்ட செபங்களைப் போல் நமக்குத் தோன்றும். ஆனால், அன்புள்ளங்களே, அன்று, அசல் கல்வாரியில், சிலுவையில் நடந்தது எதுவும் அமைதியாய், அழகாய் நடக்கவில்லை.

உடலை மட்டும் வதைத்தால் போதாதென, அங்கு அறையப்பட்டவர்களின் உள்ளத்தையும் உடைக்கும் வண்ணம், அந்தக் குற்றவாளிகள், மக்கள் முன்னிலையில் முழுவதும் நிர்வாணமாக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டனர். உடல் வேதனைகளையாகிலும், எப்பாடு பட்டாவது பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், தன்மானத்தை இழந்து, உள்ளத்தை நொறுக்கும்படி அவர்கள் மீது சுமத்தப்பட்ட அவமானங்களைத் தாங்குவதே கொடூர தண்டனையாக இருந்தது.

பல நாடுகளில் இன்றும் பின்பற்றப்படும் சித்ரவதைகளின் சிகரம், உடல் வேதனைகள் அல்ல. உள்ளத்தை உடைக்கும் சித்ரவதைகள். அத்தகையக் கொடுமைகளின் மத்தியிலும், அன்று, சிலுவையில் அறையப்பட்டிருந்த மூவருக்கிடையே நிகழ்ந்த உரையாடலை நற்செய்தி இவ்விதம் விவரிக்கிறது:

லூக்கா 23 : 39-43

சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று” என்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்று பதிலுரைத்தான். பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான். அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார்.

அந்த மூவரின் உரையாடல் நமக்குள் பல சிந்தனைகளை எழுப்பலாம். ஆனால், நாம் தவக்காலத்தின் விவிலியத் தேடல்களில் இயேசுவின் சொற்களை மட்டும் தியானித்து வருவதால், அவரது கூற்றை மட்டும் நம் சிந்தனைகளுக்கு எடுத்துக் கொள்வோம்.

"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்."

இயேசு தன்னோடு அறையுண்டிருந்தவருக்கு கொடுத்த அந்த உறுதிமொழியில் மூன்று உறுதிகள் தரப்பட்டுள்ளன.

நீர் பேரின்ப வீட்டில் இருப்பீர்.

நீர் என்னோடு இருப்பீர்.

நீர் இன்றே இருப்பீர்.

முதல் உறுதி - நீர் பேரின்ப வீட்டில் இருப்பீர்: பேரின்ப வீடு, அல்லது மோட்சம், விண்ணகம் எப்படி இருக்கும்? விண்ணகம் என்றதும் நம் மனக்கண் முன் தோன்றும் காட்சியில், புகைமண்டலம், மேகம், மின்னும் விண்மீன்கள், வெண்ணிற உடை அணிந்த தேவதூதர்கள், இசை, நடனம் என்று கொண்டாட்டங்கள் தோன்றும்.

இறைமகன் இயேசு, சிலுவையில் கொடுத்த இந்த உறுதி மொழியில், "பேரின்ப வீடு" என்ற சொற்களைப்  பயன்படுத்தியிருக்கிறார். எபிரேய மொழியில் அவர் சொன்ன இந்த அபூர்வச் சொற்றொடர், விவிலியத்தில் இன்னும் இரு இடங்களில் மட்டுமே (2 கொரி. 12: 3, திருவெளிப்பாடு 2: 7) பயன்படுத்தப் பட்டுள்ளது.  இயேசு விண்ணகத்தை பேரின்ப வீடு என்று குறிப்பிடுகிறார். ‘விண்ணகம்’ என்ற சொல்லைவிட ‘வீடு’ என்ற சொல் மனதுக்கு நெருக்கமான, நிறைவான ஒரு சொல்லாய் ஒலிக்கிறது.

ஆங்கிலத்தில் House என்பது நான்கு சுவர்களும், ஒரு கூரையும் கொண்ட ஒரு கட்டிடம். இதைக் கட்ட, மண், செங்கல், இரும்பு ஆகியவை தேவை. Home என்பது மனங்களால், அன்பால் கட்டப்படுவது. ஆழமான அர்த்தம் தரும் ஒரு சொல். அதேபோல், நம் தமிழ் மரபிலும், வீடு பேறு என்று சொல்வது இந்த உலகத்தைக் கடந்து, ஒரு நிறைவான, நிலையான அமைதியை, அன்பை நாம் பெறுவதை உணர்த்தும் ஒரு சொல்.

வீடு என்பதை ஓர் இடம் என்று சொல்வதைவிட, ஒரு நிலை என்று சொல்வதே அதிகம் பொருந்தும். ‘வீடு’ என்பது, ஒருவர் எவ்விதத் தயக்கமும், தவிப்பும் இன்றி, இயல்பாக இருக்கக்கூடிய ஒரு நிலை. நமது மனங்களில் உணரப்படும் இந்த ‘வீடு’, நான்கு சுவர்களும், கூரையும் கொண்ட ஒரு குறுகிய இடமாக இல்லாமல், திறந்த பரந்த புல்வெளிகள், பனிபடர்ந்த மலை முகடுகள், அடர்ந்த காட்டின் நடுப்பகுதி என்று பல்வேறு இடங்களாக இருக்கலாம். அல்லது, கூச்சலும் குழப்பமும் நிறைந்த ஒரு சந்தையாகவோ, அழுக்கும் நாற்றமும் நிறைந்த ஒரு சேரியாகவோ இருக்கலாம். எந்தச் சூழலிலும் ஒருவர் "வீட்டுணர்வை" பெறலாம். இயேசு அந்த மனிதருக்குத் தந்த உறுதிமொழி இதுதான்... நீர் அலைந்து, திரிந்தது போதும். "வீட்டுக்கு வாரும்" என்பதைத்தான், “நீர் பேரின்ப வீட்டில் இருப்பீர்” என்ற முதல் உறுதியில் கூறுகிறார்.

இரண்டாவது உறுதி - நீர் என்னோடு இருப்பீர்: மலையுச்சியில், அடர்ந்தக் காட்டில், சந்தையில், சேரியில்... வீடுகளை உணரலாம் என்று சிந்தித்தோம். வட துருவத்தில்  ஒரு பனிப் பாறையின் உச்சியில் நான் மட்டும் நின்றால், எப்படி இருக்கும்? குளிராக இருக்கும். தனிமையாக இருக்குமா? அது என் மனதைப் பொருத்தது. ‘தனியாக’ இருப்பதற்கும், ‘தனிமையாக’ இருப்பதற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள். ஆயிரம் பேர் கூடி இசை நடனம் என்று கொண்டாடும் நேரங்களிலும் தனிமையாய் இருக்க வாய்ப்புகள் உண்டு. பெருநகரங்களில், ‘டிஸ்கோ’ நடனங்கள் நடக்கும் இடங்களுக்குப் போனால், காதைப் பிளக்கும் ஓசைகளின் நடுவில், அங்கு ஆடிக்கொண்டிருப்பவர்களின் மனங்களைப் பார்க்கமுடிந்தால், அவர்களில் பலர், தனிமைச் சிறைகளில் சிக்கியிருப்பது தெரியும்.

தனிமையில் இருப்பது வெறும் சிறை அல்ல. அதுதான் நரகம். தனிமை நரகத்திலிருந்து விடுதலை பெற, அன்பு, அரவணைப்பு இவற்றை உணரவேண்டும். "நீர் என்னோடு இருப்பீர்" என்ற வார்த்தைகள் வழியே, இயேசு, தன்னுடன் அறையப்பட்டிருந்த குற்றவாளிக்கு, அந்த அரவணைப்பை அளிக்கிறார்.

இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட இருவரும் பிறந்தது முதல் வாழ்க்கையின் ஓரங்களுக்கு தள்ளப்பட்டு, அன்பு, அரவணைப்பு, வாழக்கூடிய வாய்ப்பு இவற்றை இழந்ததனால் குற்றவாளியாய் மாறியிருக்க வேண்டும். குற்றங்கள் புரிய ஆரம்பித்ததும், இன்னும் அவர்கள் மற்றவர்களிடமிருந்து விலகி தனிமையில் வாழ்ந்திருக்க வேண்டும். அவர்களில் ஒருவர், "நாம் தண்டிக்கப்படுவது முறையே" என்று சிலுவையில் சொன்ன போது, தன் குற்றங்களை, தன் தனிமை உணர்வுகளை இயேசுவின் பாதங்களில் கொட்டுகிறார். அன்புக்கு, அரவணைப்புக்குக் காத்திருக்கும் அந்தக் குழந்தையின் மனதை புரிந்துகொண்ட இயேசு, அவரை உடலால் அரவணைக்க முடியவில்லையெனினும் உள்ளத்தால் அரவணைத்து, தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகத் தந்த உறுதி மொழிகள்தான் “நீர் என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர்” என்ற சொற்கள்.

இயேசு மனு உரு எடுத்ததன் மையமே "கடவுள் நம்மோடு" என்பதை உணர்த்தத்தானே. தான் ஒரு ‘எம்மானுவேல்’ என்ற உண்மையை, சிலுவையிலும் இயேசு உணர்த்தியது, அழகான ஓர் இறை வெளிப்பாடு.

மூன்றாவது உறுதி - இன்றே இருப்பீர்: அன்பர்களே, இந்த உறுதியைப் புரிந்து கொள்வது சிறிது கடினம். இயேசு, சிலுவையில் அந்த குற்றவாளியைப் பார்த்து சொன்ன அந்த வார்த்தைகளில் எவ்வித நிபந்தனையும் ஒலிக்கவில்லை.

“இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்று சொன்ன அந்த மனிதரைப் பார்த்து, இயேசு, நிபந்தனைகளோடு பேசியிருந்தால், இப்படி பேசியிருக்க வேண்டும்: “நீயா? இத்தனைக் குற்றங்கள் செய்தவனா? விண்ணகத்திலா? ம். பார்ப்போம். ஒரு சில ஆண்டுகள் உன் பாவங்களுக்குப் பரிகாரம் செய்துவிட்டு, பிறகு வா. அப்போது உன்னை விண்ணகத்தில் சேர்க்கமுடியுமா என்று பார்ப்போம்.” நிபந்தனைகள் நிறைந்த வார்த்தைகள் இவை. ஆனால், இயேசு சொன்னது, “இன்றே நீர் என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர்” என்ற உறுதி மட்டுமே.

பேதுருவின் இரண்டாம் திருமுகத்தில் நாம் காணும் வரிகள் இயேசுவின் "இன்றே" என்ற வார்த்தையைப் புரிந்துகொள்ள உதவும்.

பேதுரு இரண்டாம் திருமுகம் 3: 8

அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன.

காலம் என்பது மனிதர்களாகிய நாம் ஏற்படுத்திக்கொண்ட ஓர் அளவு. நொடி, நிமிடம் என்று ஆரம்பித்து ஆயிரம் வருடங்கள், கோடான கோடி வருடங்கள் என்று நாம் எண்ணிக்கொண்டே இருக்கலாம். நேற்று, இன்று, நாளை, என்று பல பாகுபாடுகள் செய்து கொள்ளலாம். இறைவனுக்கு இவை கிடையாது. அவருக்கு, எக்காலமும், நிகழ் காலமே. இன்றே, இப்போதே என்பவை மட்டுமே அவரது அகராதியில் உள்ள சொற்கள். இறைவன் இருக்கும்போது, அங்கு, எப்போதும், நிரந்தரமாய் இருப்பது, நிகழ்காலம் மட்டுமே. மனித அறிவால் இதைப் புரிந்துகொள்வது கடினம். ஏனெனில் நாம் அனைவரும் நாமே உருவாக்கிக்கொண்ட காலத்தின் கைதிகள்.

நேரத்தைப்பற்றிய கவலையே இல்லாமல் வாழ முடியுமா? சில நேரங்களில் இப்படி வாழ்ந்திருக்கிறோம். நம் மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒரு செயலில் ஈடுபடும்போது, எடுத்துக்காட்டாக, அழகான இசையில் முற்றிலும் நம்மை மறந்திருக்கும்போது, அல்லது நம் மனதிற்குப் பிடித்தவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது... ஆழ்நிலை தியானங்களில் மூழ்கும்போது... நேரம் போனதே தெரியாமல் வாழ்ந்திருக்கிறோம் இல்லையா?

நேரம் போனதே தெரியாமல், நேரம் பற்றிய கவலையே இல்லாமல் நாம் வாழ்ந்த இந்த குறுகிய காலங்களை முழு வாழ்க்கையிலும் உணர்வதுதான் இறைவனுடன் நாம் இருக்கப்போகும் நேரம். அந்த அற்புதக் காலத்தை இயேசு, அந்த குற்றவாளிக்குத் தரும் வகையில், அவரிடம்  "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்று சொன்னார்.

இயேசு கல்வாரியில் தன்னோடு அறையப்பட்டவருக்கு கடவுளின் நிபந்தனையற்ற அன்பை உணர்த்தி அவருக்கு மீட்பளித்ததைப் போல், கடவுளின் பேரன்பை இத்தவக்காலத்தில் நமக்கும் உணர்த்தி, அவரது பேரின்ப வீட்டில் நம்மையும் இணைக்க வேண்டுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.