2015-03-07 15:58:00

வெப்பநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து எவரும் தப்புவதில்லை


மார்ச்,07,2015. இவ்வுலகில் வெப்பநிலை மாற்றத்தின் தாக்கங்களிலிருந்தும், உலகுக்கு மிகவும் கவலை தரக்கூடிய இந்நிலையை அகற்றுவதற்கு இருக்கும் பொறுப்பிலிருந்தும் எவரும் விதிவிலக்குப் பெறுவதில்லை என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீட நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், இயற்கையோடும், ஒருவர் ஒருவரோடும் நாம் சார்ந்திருப்பதை ஏற்று, மனித சமுதாயம் மற்றும் இப்புவியின் பொது நலன்மீது நாம் அனைவரும் அக்கறையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

வெப்பநிலை மாற்றத்தின் முழு தாக்கங்கள் குறித்து அறிவியலாளர்கள் ஆராய்ந்துவரும் அதேவேளை, இத்தாக்கங்களைக் குறைப்பதற்கும், இதனால் பாதிக்கப்படும் வறியோரையும், வருங்காலத் தலைமுறைகளையும் பாதுகாப்பதற்கும் நாம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார் பேராயர் தொமாசி.

வருகிற நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை பாரிசில் நடைபெறவிருக்கும் வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா. உலக மாநாடு வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் உலகளாவிய உடன்படிக்கையை உருவாக்கும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார் பேராயர் தொமாசி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.