2015-03-06 15:21:00

கடுகுச் சிறுத்தாலும்...: மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வழியே


தஞ்சை பெரிய கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து கொண்டிருந்தபோது,. ஒரு பெரிய பாறையைச் சுவரின் மேல் ஏற்றுவதில் வேலையாட்கள் பலர் ஒன்று சேர்ந்து கயிறு போட்டு இழுத்தும், முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர்..

அங்கிருந்த மேற்பார்வையாளரோ, “என்னை எல்லோரும் ஏமாற்றுகிறீர்கள். இந்தப் பாறையை மேலே ஏற்ற முடியவில்லையா?” என்று கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வழிப்போக்கர் ஒருவர், மேற்பார்வையாளர் அருகில் சென்று, “ஐயா! நீங்களும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்யக் கூடாதா?” என்று கேட்டார்.

“நான் இங்கு மேற்பார்வையாளன் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று ஆணவத்துடன் கேட்டார் மேற்பார்வையாளர்.

“அப்படியா?” என்ற அந்த வழிப்போக்கர், அங்கிருந்த வேலைக்காரர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்ய, பாறையும் மேலே போய்ச் சேர்ந்தது.

பெருஞ்செல்வந்தரைப் போலிருந்த அந்த வழிப்போக்கர் வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்தது அந்த மேற்பார்வையாளருக்கு ஆச்சரியமாக இருந்தது.

மறுநாள் சோழப் பேரரசர் ராஜராஜ சோழரிடமிருந்து அந்த மேற்பார்வையாளருக்கு ஓர் ஓலை வந்தது. அதில், “கோயில் திருப்பணிக்கு ஆட்கள் போதவில்லை என்றால் உடனே அரசருக்குச் சொல்லி அனுப்பவும். நேற்று வேலை செய்ததைப் போல் அவர் வந்து வேலை செய்வார்” என்று எழுதியிருந்தது.

இதைப் படித்த மேற்பார்வையாளருக்கு அப்போதுதான் புரிந்தது, வழிப்போக்கரைப் போல் மாறுவேடம் பூண்டு கோயில் பணி நடக்கும் இடத்தைப் பார்வையிட வந்தது பேரரசர் ராஜராஜ சோழர் என்று.  மேற்பார்வையாளரின் ஆணவமும் அன்றே ஒழிந்தது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.