2015-03-05 16:03:00

மியான்மாரில் அன்னை மரியாவின் உள்ளம் பாய்ந்த ஏழு வாள்கள்


மார்ச்,05,2015 மியான்மாரைப் பொருத்தவரை, அன்னை மரியாவின் உள்ளத்தை ஏழு வாள்கள் ஊடுருவியுள்ளன என்று கர்தினால் Charles Maung Bo அவர்கள், மரியாவின் திருத்தலத்தில் ஆற்றியத் திருப்பலியில் மறையுரை வழங்கினார்.

மியான்மாரின் அன்னை மரியா தேசியத் திருத்தலத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாகக் கூடியிருந்த பக்தர்களுக்கு கர்தினால் Maung Bo அவர்கள் வழங்கிய மறையுரையில், மியான்மார் சமுதாயம் சந்திக்கும் ஏழு அநீதிகளை, மரியாவின் உள்ளத்தை ஊடுருவும் ஏழு வாள்கள் என்று குறிப்பிட்டார்.

தலைமுறை தலைமுறையாய் வளரும் முதலாளித்துவம், ஒரு சில குடும்பங்களே அனைத்து செல்வங்களையும் பெற்றிப்பது, நாட்டில் நடைபெறும் மோதல்களை உரையாடல் வழியே தீர்க்க மறுப்பது ஆகியவை இந்த ஏழு வாள்களில் சில என்று கர்தினால் Maung Bo அவர்கள் குறிப்பிட்டார்.

ஒரு சிலரின் கட்டுக்கடங்காத பேராசையால் இயற்கை வளங்கள் அழிவுறுதல், வறியோரின் நிலங்களைப் பறிப்பதற்கு அநீதிமான சட்டங்கள் துணைபோதல், மனித வர்த்தகம், போதைப்பொருள் வர்த்தகம், ஆகியவை அன்னை மரியாவின் உள்ளத்தை ஊடுருவும் வாள்கள் என்று கர்தினால் Maung Bo அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மியான்மாரில் நிகழும் அநீதிகளால் பக்கத்து நாடுகளுக்குச் சென்றுள்ள இளையோரைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Maung Bo அவர்கள், நம் தவறுகளைத் திருத்திக்கொள்ள தவக்காலம் தகுந்ததொரு தருணம் என்றும் கூறினார்.

ஆதாரம் :  Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.