2015-02-28 15:39:00

இலங்கை-திருத்தந்தை திருப்பிக் கொடுத்த நன்கொடை ஏழைகளுக்கு


பிப்.28,2015. கடந்த சனவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தில், அவர் திருப்பிக் கொடுத்த நன்கொடை நிதியை, அந்நாட்டின் ஏழைகளுக்கு வழங்குவதற்கு இலங்கை ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்.

திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்காக இலங்கை மக்களிடமிருந்து கிடைத்த 87 இலட்சம் ரூபாயை, கொழும்புப் பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் திருத்தந்தையிடம் அன்பளிப்பாக வழங்கினார். இலங்கைத் திருத்தூதுப் பயணத்தை முடித்துத் திரும்பும்வேளையில், திருத்தந்தையும் அந்நிதியை கர்தினால் இரஞ்சித் அவர்களிடமே திருப்பி வழங்கினார்.

இலங்கையின் 12 மறைமாவட்டங்களிலுள்ள ஏழைகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அந்நிதியைச் செலவிடுவதற்கு ஆயர்கள் தீர்மானித்து அதைப் பங்கிட்டுக் கொடுத்துள்ளனர் என்று இலங்கையில் பிரசுரமாகும் ஒரு தினத்தாளில் கூறப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 15ம் தேதி காலையில் இலங்கைத் திருத்தூதுப் பயணத்தை முடித்துத் திரும்பும்வேளையில், 87,60,690.25 ரூபாய்க்கான காசோலையை கர்தினால் இரஞ்சித் அவர்கள் திருத்தந்தையிடம் கொடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.