2015-02-27 15:01:00

பூமியைவிட பெரிய கருந்துளை, சீன ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு


பிப்.27,2015. பூமியைவிட ஏறக்குறைய 1,200 கோடி அளவிலான பெரிய கருந்துளை ஒன்று விண்வெளியில் இருப்பதை சீன விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு SDSS J0100+2802 என்றும் அவர்கள் பெயரிட்டுள்ளனர்.

"பிரபஞ்சத்தில் பெருவெடிப்பு நிகழ்ந்து ஏறக்குறைய 90 இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கருந்துளையை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இதன்மூலம் கருந்துளைகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது குறித்த ஆய்வு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது" என்று இதனைக் கண்டுபிடித்த ஆய்வாளர்களில் ஒருவரான சீனாவின் Peking பல்கலைக்கழகப் பேராசிரியர் Wu Xuebing கூறுகிறார்.

சீனாவில், லிஜியாங் நகரில் உள்ள‌ விண்வெளி ஆய்வாளர்கள் 2.4 மீட்டர் குறுக்களவு கொண்ட‌ தொலைநோக்கி உதவியுடன் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த கருந்துளை பூமியில் இருந்து 1,280 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கருந்துளை இருப்பதை அமெரிக்காவும், சிலி நாடும் உறுதி செய்துள்ளன.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைகளிலேயே இதுதான் மிகவும் பெரியதாகவும், இதன் ஒளிக்கதிர்கள் அதீத வெளிச்சம் கொண்டதாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கருந்துளை என்பது விண்வெளியின் ஒரு பகுதியாகும். இது மிகவும் அடர்த்தி வாய்ந்த ஒன்று. எனவே, இதனுள் ஒளி கூட புக முடியாது. இந்தக் கருந்துளை தனக்கு அருகில் இருக்கும் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் சக்தி கொண்டது. இதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக, ஒளித்துகள்கள் மின்னும் கதிர்களை வெளியிடும் தன்மை கொண்டவையாக உள்ளன. இந்த ஒளிக் கதிர்கள் 'குவாசார்' என்று அழைக்கப்படுகின்றன.

இதுகுறித்து சீன அறிவியல் அகாடெமியைச் சேர்ந்த விண்வெளி ஆய்வாளர் சென் ஜியான்ஷெங் கூறும்போது, "பொதுவாக, இதுபோன்ற ஒரு கருந்துளையைக் கண்டுபிடிக்க 10 மீட்டர் குறுக்களவு கொண்ட தொலைநோக்கிகள்தான் பயன் படுத்தப்படும். ஆனால் 2.4 மீட்டர் குறுக்களவு கொண்ட தொலைநோக்கியைப் பயன்படுத்தி இவர்கள் கண்டுபிடித்திருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனைதான். இது சீன விண்வெளி அறிவியலாளர்களின் அறிவுத்திறனைக் காட்டுகிறது" என்றார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.