2015-02-27 13:25:00

கடுகு சிறுத்தாலும்.. :. ஏமாற்ற நினைப்பவர் ஏமாறுவது உறுதி


ஒரு நாள் இறைவனின் தூதர் ஒருவர், ஒரு மனிதரிடம் வந்து சொன்னார்:“மனிதா! இன்று உன்னுடைய வாழ்வின் கடைசி நாள். நான் உன்னை அழைத்துச்செல்ல வந்திருக்கிறேன். இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலில் முதலில் உள்ளது” என்று.

சாகப் பயந்த அந்த மனிதர் ஒரு தந்திரம் செய்தார்.  

”சரி, நீங்கள் இருக்கையில் அமருங்கள், நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு தேநீர் அருந்திவிட்டு போகலாம்” என்று இறைத்தூதரிடம் கூறினார். அவரும் சம்மதிக்கவே, இந்த மனிதரோ, தேநீரில் தூக்க மருந்தை கலந்து கொடுத்து, இறைத்தூதர் மயக்கமுற்றிருந்த வேளையில், அந்தப் பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு, கடைசியில் கொண்டுபோய் எழுதி வைத்தார் அம்மனிதர். இறைவனிடமிருந்து வந்த தூதர் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அம்மனிதரிடம் சொன்னார், “நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய், அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றிக்கொண்டேன். அதாவது, பட்டியலின் மேலிருந்து இல்லாமல், பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன்” என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.