ஒரு நாள் அரசர் ஒருவர், தனது பணியாளுடன் வெளியூர் சென்றார். இருட்டி விட்டதால் வழியிலிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்தார் அரசர். அங்கு ஒரு மரத்தில் குதிரையைக் கட்டிவிட்டு, தனது பணியாளிடம், இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார் அரசர். சுயமாக சிந்திக்கத் தெரியாத அந்தப் பணியாள், அரசரிடம், அரசே, இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று கேட்டார். அதற்கு அரசர், ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சனை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் தூக்கம் வராது என்றார். பணியாளும், சரி நல்லது என்றார். சத்திரத்துக்குள் சென்ற அரசர், பணியாள் என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்பதற்காக, சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார். 'அரசே, நான் தூங்கவில்லை. வானில் இருக்கும் விண்மீன்கள் தானாக வந்தனவா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா என்ற சிந்தனையில் இருக்கிறேன் என்றார் பணியாள். நல்லது என்று கூறிச்சென்ற அரசர் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார். பணியாள் சொன்னார்- அரசே, கடலில் உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டுவந்து கொட்டினார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று. அரசர் நிம்மதியுடன் படுத்துத் தூங்கினார். காலையில் எழுந்து வந்து பார்த்தபோது பணியாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப் பார்த்த அரசர், ''இப்போது என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார். பணியாள் சொன்னார்-அரசே, உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா என, ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |