2015-02-25 15:33:00

பிலிப்பின்ஸ் நாட்டில் அமைதி நிலவ சிறப்பு செபம்


பிப்.25,2015 பிலிப்பின்ஸ் நாட்டில், குறிப்பாக, வன்முறைகளால் பாதிக்கப்படும் Mindanao பகுதியில் அமைதி நிலவ, அந்நாட்டுத் தலத்திருஅவை மார்ச் மாதம் முழுவதும் சிறப்பு செபம் ஒன்றை செபிக்க, பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை விண்ணப்பித்துள்ளது.

மார்ச் 1ம் தேதி முதல், மார்ச் 28ம் தேதி முடிய ஒவ்வொரு நாளும், திருப்பலியில் திருவிருந்துக்குப் பின்னர், இந்தச் சிறப்புச் செபம் அனைத்துக் கோவில்களிலும் செபிக்கப்படவேண்டும் என்று பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Socrates Villegas அவர்கள் மடல் அனுப்பியுள்ளார்.

இவ்வாண்டு சனவரி 25ம் தேதி, Mindanao தீவின் Mamasapano எனுமிடத்தில் நடைபெற்ற வன்முறையில் இறந்தோரை எண்ணி இந்நாடு கண்ணீர் சிந்துகிறது என்றும், இக்கொடுமைக்குத் தகுந்த பதில், மக்கள் எழுப்பும் செபங்களே என்றும் பேராயர் Villegas அவர்கள், Fides செய்தியிடம் கூறியுள்ளார்.

Mamasapanoவில் நடைபெற்ற வன்முறை, நம்மைப் பிரிக்கும் தீய சக்தியாக மாறாமல் இருக்க, நமது செபங்களே சிறந்த கருவியாக அமையும் என்று Cotabato பேராயர், கர்தினால் Orlando Quevedo அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.