2015-02-25 15:32:00

தீவிரவாதம் பற்றி இஸ்லாமிய உயர் குருவின் வன்மையான கண்டனம்


பிப்.25,2015 திருக்குரானில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை, வார்த்தைக்கு, வார்த்தை அப்படியே பொருள்கொண்டு, அதனால், தீவிரவாதத்தைப் பின்பற்றும் ஒருசில இஸ்லாமியக் குழுக்களின் போக்கை, இஸ்லாமிய உயர் குரு ஒருவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

எகிப்தின் தலைநகர், கெய்ரோவில் உள்ள al-Azhar பல்கலைக் கழகத்தின் தலைமை குரு, Sheikh Ahmed al-Tayeb அவர்கள், அண்மையில் லிபியா கடற்கரையில் 21 காப்டிக் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்ட கொடுமையைக் கண்டனம் செய்து பேசுகையில் இவ்வாறு கூறினார்.

இஸ்லாமியக் கோட்பாடுகளை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சொல்லித் தரும்போது, எவ்வகையில் இம்மதத்தின் அடிப்படை உண்மைகளைச் சொல்லித் தருகிறோம் என்பதை நாம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தலைமை குரு Tayeb அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

வெள்ளிக்கிழமைகளில் மசூதிகளில் ஒலிபரப்பாகும் மத குருக்களின் உரைகள் இஸ்லாமிய மதத்தின் உண்மைக் கோட்பாடுகளை எடுத்துரைக்கும் உரைகளாக அமையவேண்டும் என்று தலைமை குரு Tayeb அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இஸ்லாமியத் தீவிரவாதிகள் மேற்கொண்டு வரும் வன்முறைச் செயல்கள், உலகெங்கும் பரவியிருக்கும் இஸ்லாம் மக்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று தலைமை குரு Tayeb அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

கெய்ரோவில் உள்ள al-Azhar பல்கலைக் கழகத்தின் தலைமை குரு கூறியுள்ள கருத்துக்களை ஒத்த எண்ணங்களை, எகிப்து, மொராக்கோ ஆகிய நாடுகளின் இஸ்லாமியத் தலைவர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.