2015-02-25 15:36:00

சிரியா-கடத்திச் செல்லப்பட்டுள்ள கிறிஸ்துவர்களுக்காக செபம்


பிப்.25,2015 சிரியாவின் வடக்கிழக்குப் பகுதியிலிருந்து, ISIS தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ள 90க்கும் அதிகமான கிறிஸ்துவர்களுக்காக அனைவரும் ஒருங்கிணைந்து செபிக்கவேண்டும் என்று சிரிய கத்தோலிக்கத் திருஅவையின் முதுபெரும் தந்தை மூன்றாம் இக்னேசியஸ் ஜோசப் யூனான் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

மனித உயிர்கள் மட்டில் எவ்வித மதிப்பும் இன்றி செயல்படும் ISIS தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் அப்பாவி கிறிஸ்தவர்களுக்காக செபிப்பது ஒன்றே தற்போது நாம் செய்யக்கூடிய செயல்பாடு என்று முதுபெரும் தந்தை ஜோசப் யூனான் அவர்கள், CNA கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் Al -Hasakah பகுதியில், மிகப் பழமையான கிறிஸ்தவக் குடியிருப்புக்கள் என்று கருதப்படும் இரு கிராமங்களிலிருந்து 90க்கும் அதிகமான சிரிய கத்தோலிக்கர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று CNA செய்திக்குறிப்பு கூறுகிறது.

சிரியாவில் தொடர்ந்துவரும் போரினால், அந்நாட்டிலிருந்து 30 இலட்சம் மக்கள் வேற்று நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும், 65 இலட்சத்திற்கும் அதிகமானோர், உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்து வாழும் கட்டாயத்திற்கு உள்படுத்தப்படுள்ளனர் என்றும் CNA செய்தி கூறுகிறது.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.