2015-02-25 14:40:00

கடுகு சிறுத்தாலும்.... : புத்திசாலித்தனம் அனைவருக்கும் பொது


அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை, என்று ஒரு சிறைக்கைதிக்கு அவருடைய மனைவி கடிதம் எழுதியிருந்தார்.

கைதி பதில் எழுதினார், அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும், என்று.

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம் வந்தது. அன்புள்ள கணவருக்கு, யாரோ ஒரு கூட்டத்தினர் பெரிய இயந்திரங்களுடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர். இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..? என்று அதில் எழுதியிருந்தது.

கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினார், அன்பே.. அவர்கள் காவல் துறையினர். நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்.. ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு, என்று.

புத்தியிருந்தால் எங்கிருந்தாலும் பிழைத்துக்கொள்ளலாம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.