2015-02-23 16:07:00

மன்னார் ஆயர் : போரின்போது விஸ்வமடு அருகே 30,000 சடலங்கள்


பிப்.23,2015. இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்குப் பிரேதப்பரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னரே தமக்கு இந்தத் தகவல் தெரியவந்ததாக பிபிசி வானொலியில் தெரிவித்த ஆயர் ராயப்பு ஜோசப் அவர்கள், இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்தது இனப்படுகொலையே என்று இலங்கையின் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியானதே என்றும் தெரிவித்தார்.

போரின் இறுதி எட்டுமாத காலத்தில் 1,46,679 பேர் என்ன ஆனார்கள் என்ற கணக்கு கொடுக்க முடியாமல் இருப்பதாகவும், அவர்கள் எங்கே என்று இன்றுவரை தெரியவில்லை என்றும் தெரிவித்த மன்னார் ஆயர், இலங்கையின் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் போருக்குப் பின்னரும் தொடர்வதாக தெரிவித்தார்.

இலங்கையில் நடந்த போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு நடத்தப்போவதாக கூறும் புதிய உள்நாட்டு விசாரணையால் எந்த பயனும் ஏற்படாது என்று தெரிவித்த மன்னார் ஆயர், ஐ.நா. நிறுவனத்தின் மேற்பார்வையிலான அனைத்துலக விசாரணையே உண்மைகளை வெளியில் கொண்டுவர உதவும் என்றும் கூறினார்.

ஆதாரம் : BBC/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.