2015-02-21 15:40:00

திருத்தந்தை, ஜெர்மன் சான்சிலர் Angela Merkel சந்திப்பு


பிப்.21,2015. ஜெர்மன் நாட்டுப் பிரதமர் Angela Merkel அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

இச்சந்திப்பை முடித்து, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் Paul Richard Gallagher ஆகிய இருவரையும், தனது பிரதிநிதி குழுவுடன் சந்தித்துப் பேசினார் ஜெர்மன் பிரதமர் அதாவது அந்நாட்டு சான்சிலர் Angela Merkel.

பவேரியாவில் நடைபெறவிருக்கும் ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு, மனித வர்த்தகம், பெண்களின் உரிமைகள் மீறப்படல், வறுமை மற்றும் பசிக்கெதிரான நடவடிக்கைகள்,  உலகம் எதிர்கொள்ளும் நலவாழ்வுச் சவால்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற  விவகாரங்கள் இச்சந்திப்புகளில் இடம்பெற்றன என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி சே.ச. அவர்கள் கூறினார்.

மேலும், உலகின் சில பகுதிகளின் மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திர நிலவரங்கள் பற்றியும், சமூக வாழ்வில் ஆன்மீக விழுமியங்களின் முக்கியத்துவம் பற்றியும் பேசிய இத்தலைவர்கள், ஐரோப்பாவின் நிலைமை, குறிப்பாக, உக்ரேய்னில் அமைதியான தீர்வு எட்டப்படுவதற்கு ஐரோப்பாவின் அர்ப்பணம் குறித்தும் பேசினர்.  

திருத்தந்தையுடன் 40 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது ஜெர்மன் சான்சிலர் Angela Merkel அவர்கள், அகதிச் சிறாருக்கு உதவுவதற்கென நன்கொடையையும், Bach குறுந்தகடு ஒன்றையும் திருத்தந்தைக்கு வழங்கினார்.

திருத்தந்தையும் தனது பாப்பிறைப் பணி பதக்கம் ஒன்றை வழங்கி, அரசுகளின் தலைவர்களுக்கு இதைக் கொடுக்க விரும்புகிறேன், ஏனெனில் இதில் புனித மார்ட்டீன் தனது மேலாடையை ஏழைக்குக் கொடுத்த உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.