2015-02-21 14:37:00

தவக்காலம் முதல் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


தவக்காலத்தை ஆரம்பித்திருக்கிறோம். இந்த வழிபாட்டு காலத்தைப் பற்றிய நமது எண்ணங்களை இந்த ஞாயிறு சிந்தனையின் துவக்கத்தில் தெளிவுபடுத்த முயல்வோம். தமிழில் தவக்காலம் என்று நாம் அழைப்பதை, ஆங்கிலத்தில் Lent அல்லது Lenten Season என்று அழைக்கிறோம்.

Lent என்ற வார்த்தை, 'lente' என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது. இலத்தீன் மொழியில், 'lente' என்பதற்கு, ‘மெதுவாக’ என்று பொருள். Lenten என்ற வார்த்தை Lencten என்ற ஆங்கிலோ சாக்ஸன் (Anglo Saxon) வார்த்தையிலிருந்து வந்தது. இதன் பொருள் 'வசந்தகாலம்'. 'மெதுவாக', 'வசந்தகாலம்' என்ற இரு அர்த்தங்களையும் இணைக்கும்போது உருவாகும் ‘மெதுவாக வரும் வசந்தகாலம்’ என்ற சொற்றொடர் தவக்காலத்திற்கு அழகியதோர் அடையாளம்.

உலகின் பல நாடுகளில், மூன்று மாதங்கள் கடும் குளிர்காலம். இந்தக் குளிர்காலத்திற்கு முன்னால் மூன்று மாதங்கள் இலையுதிர் காலம். எனவே, ஏறத்தாழ ஆறு, அல்லது ஏழு மாதங்கள், மரங்களும் செடிகளும், முதலில் தங்கள் இலைகளை இழந்து, பின்னர் பொழியும் பனியில் புதைந்துபோகும். இந்த மாதங்களில் தாவரங்களைப் பார்க்கும்போது, அவற்றில் உயிர் உள்ளதா, அவை பிழைக்குமா என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். ஆனால், அந்த பனிக்குள்ளும் சிறு துளிர்கள் கண்ணுக்குத் தெரியாதபடி வளர்ந்திருக்கும். பரந்து கிடக்கும் பனிப்போர்வை, சிறிது சிறிதாகக் கரையும்போது, புதைந்துபோன துளிர்கள் தலை நிமிரும். மீண்டும் தாவர உலகம் தழைத்துவரும்.

ஆறு மாதங்களாய் உயிரற்றது போல் காணப்படும் தாவர உலகம், திடீரென, ஓரிரவில், பூத்துக் குலுங்குவது கிடையாது. மெதுவாக, மிக, மிக மெதுவாக, நம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்காத வகையில் வசந்த காலம் வந்து சேர்கிறது. மெதுவாக, நிதானமாக, ஆறஅமர மாற்றங்களை உருவாக்கும் வசந்தகாலம், தவக்காலத்திற்கு அழகியதோர் அடையாளம்.

அடையாளங்கள், மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவக்காலம் என்றதும், பொதுவாக, சாம்பல், சாக்குத்துணி, சாட்டையடி என்று சோகமான, துயரமான அடையாளங்களே மனதை நிரப்பும். ஆனால், தவக்காலம், மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம் என்ற கோணத்தில் பார்க்க நம்மை அழைக்கிறது, திருஅவை. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய தவக்காலச் செய்தியின் துவக்கத்தில் கூறும் வார்த்தைகள், இவ்வெண்ணங்களை எதிரொலிக்கின்றன: "திருஅவை முழுவதும் மறுமலர்ச்சி பெறும் காலம், தவக்காலம். தனி மனிதரும்,  குழுமங்களும் மறுமலர்ச்சி பெறும் காலம் இது. அனைத்திற்கும் மேலாக, 'இதுவே அருள்நிறை காலம்' (2 கொரி. 6:2)" என்று திருத்தந்தை தன் தவக்காலச் செய்தியைத் துவக்கியுள்ளார். ‘வசந்தம்’ கேட்பதற்கு அழகான சொல், அழகான எண்ணம். உண்மைதான். ஆனால், அந்த வசந்தம் வருவதற்கு முன் மாற்றங்கள், வேதனைக்குரிய மாற்றங்கள் நடைபெற வேண்டும்.

மாற்றத்தை, மிகக் குறிப்பாக, மனமாற்றத்தை உருவாக்க நமக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய வாய்ப்பு, தவக்காலம். மாற்றத்தை நமக்கு நினைவுறுத்த, தவக்காலத்தின் முதல் நாளான திருநீற்றுப் புதனன்று நாம் பயன்படுத்தும் ஓர் அடையாளம் - சாம்பல். அருள்பணியாளர், நம் நெற்றியில் சாம்பலைக் கொண்டு சிலுவை அடையாளம் வரைந்தபோது, "மனம் திரும்பி நற்செய்தியை நம்புவாயாக" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். சில ஆண்டுகளுக்கு முன், சாம்பலைப் பூசும் நேரத்தில் அருள் பணியாளர் பயன்படுத்திய வார்த்தைகள், நம் இறுதி முடிவை நினைவுறுத்தும் வார்த்தைகளாக அமைந்தன: "நீ மண்ணாக இருக்கிறாய்; மண்ணுக்கேத் திரும்புவாய்."

சாம்பலை அழிவாக, மரணமாக மட்டும் எண்ணிப் பார்க்காமல், புதிய மாற்றங்களைக் கொணரும் அடையாளமாகவும் காண்பதற்கு, புராணப் பறவையான Phoenix ஓர் அழகிய எடுத்துக்காட்டு. Phoenix பறவை, தன் வாழ்வு முடியப்போகிறது என்று உணரும் வேளையில், தனக்கென கூடு ஒன்றைக் கட்டி அதற்குள் அமர்ந்துகொண்டு தன் கூட்டுக்குத் தீ மூட்டும். தீயில் எரிந்து அந்தப் பறவை சாம்பலாகும்போது, அச்சாம்பலிலிருந்து அடுத்தத் தலைமுறையான பறவை வெளிவரும். புராணங்களில் சொல்லப்பட்டுள்ள இந்தப் பறவை உண்மையா இல்லையா என்ற ஆராய்ச்சிகளை விலக்கிவிட்டு சிந்தித்தால், கற்பனையில் நாம் காணும் இக்காட்சி, ஓர் அடையாளமாக, பாடமாக அமையும்.

நெருப்புக்குள் நிகழும் புதுமைகள் தான் எத்தனை எத்தனை! நெருப்பை, அழிக்கும் கருவியாகவே அதிகம் பார்த்து பழகிவிட்ட நமக்கு, அழிவுக்குள் நிகழும் அற்புதங்களை மறந்துபோக வாய்ப்புண்டு. நெருப்பைப்போலவே, நீரும், பெருவெள்ளமாக வரும்போது, அழிவுகளைக் கொணரும் என்பதை நாம் அறிவோம். அத்தகையதோர் அழிவிலிருந்து அற்புதங்களை நிகழ்த்திய இறைவனை நமக்கு நினைவுறுத்துகிறது, இன்றைய முதல் வாசகம். நோவா காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் இறுதியில் இறைவன் புதியதொரு வாக்குறுதியை அளித்தார். அந்த வாக்குறுதியின் அடையாளமாக வானவில்லை விண்ணில் பதித்தார். அழிவிலிருந்து அற்புதங்களை உருவாக்கும் இறைவனின் வார்த்தைகள் தொடக்க நூலில் இவ்வாறு ஒலிக்கின்றன:

தொடக்கநூல் 9: 8-15

கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: “இதோ! நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும், பேழையிலிருந்து வெளிவந்து உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். மண்ணுலகின் மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது, எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன்.”

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க திருஅவை நம்மை அழைக்கிறது. தவக்காலத்தைப் புத்துயிர் தரும் வசந்தகாலம் என்ற வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதுபோல், சோதனைகளைப் பற்றியும் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்க முயற்சி செய்வோம்.

சோதனை என்ற வார்த்தையைக் கேட்டதும், நம்மில் பலருக்கு அவ்விடத்தை விட்டு ஓடிவிடவேண்டும் போல் தோன்றலாம். அவ்வளவு பயம். ஆறஅமர சிந்தித்தால், சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை என்ற உண்மையை நாம் உணரலாம். இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இயேசு சோதனைகளைச் சந்தித்ததும், அவற்றை அவர் வென்றதும், இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லித்தரும் நல்ல பாடங்கள்.

தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று பகிரக்கூடிய மறையுரையைப் பற்றி இன்னொரு அருள்பணியாளரோடு நான் பேசிக்கொண்டிருந்தேன். சோதனை என்ற வார்த்தையை நான் சொன்னதும், அவர் "சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி" என்ற பழைய திரைப்படப் பாடலைப் பாட ஆரம்பித்தார். தீர்க்கமுடியாத பிரச்சனைகளில் சிக்கிய ஒரு வீட்டுத்தலைவன் பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. நாம் பிரச்சனைகளைச் சந்திக்கும்போது, "சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி" என்றோ, அல்லது, இதையொத்த வார்த்தைகளையோ பயன்படுத்தியிருப்போம். இத்தகைய வார்த்தைகளைச் சொல்லி, ஓர் இயலாத் தன்மையை மனதில் வளர்த்திருப்போம்.

சோதனைகளை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்? தப்பித்துக் கொள்ள முடியாத அளவு பெருகிவரும் ஒரு காட்டாற்று வெள்ளத்தில் நாம் அடித்துச் செல்லப்படுவது போல நம்மில் பலர் சோதனைகளைப் பார்க்கிறோம். இத்தகைய எண்ணங்களை நாம் வளர்த்துக் கொள்வதால், சோதனைகளுக்கு ஓர் அபூர்வ சக்தியை நாம் தருகிறோம். சோதனைகளுக்கும், அவற்றின் அடிப்படைக் காரணமான தீய சக்திக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால், உள்ளத்தில் நம் உறுதி, நம்பிக்கை இவை குலைகிறதே... அதுதான் இன்று உலகத்தில் பலர் சந்திக்கும் மாபெரும் சோதனை. சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவற்றோடு போராடி வெற்றி பெறவும் நம்முள் உறுதியான மனமும் உள்ளது. இதையும் நாம் நம்ப வேண்டும்.

நாம் வாழும் உலகில் நல்ல, ஆக்கப்பூர்வமான செயல்கள் ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. ஆங்காங்கே தீயவைகளும், அழிவுகளும் நடக்கின்றன. ஆனால், ஒரு சாபக்கேடாக, நமது செய்தித் தாள்கள், தொலைகாட்சி, வானொலி என்று அனைத்துத் தொடர்புச்சாதனங்களும் பெருமளவில் அழிவையே நமக்குப் படங்களாக, கதைகளாகச் சொல்லி நம் மனதை உருக்குலைய வைக்கின்றன. வசூலுக்குச் சுவையானவை இந்தக் கோரங்கள்! ஆனால், வாழ்க்கையில் இவை உண்டாக்குவது விபரீதங்கள். இவற்றையே ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பார்க்கும்போது, "ச்சே, என்னடா உலகம்" என்ற எண்ணம் ஆழமாகப் பதிகிறது. "சோதனை மேல் சோதனை... போதுமடா சாமி." என்று நம்மைச் சொல்லவைத்து விடுகின்றது.

இப்படி ஓர் இயலாத்தன்மை ஒவ்வொரு நாளும் நமக்கு ஊட்டப்படும்போது, இந்த உலகத்தின் அழிவு சக்திகளுக்கு முன் நாம் வெறும் பார்வையாளர்கள் தான்... நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற தவறான முடிவுக்கு நாம் வருகிறோம். இதுவே இன்று நம் மத்தியில் உள்ள பெரிய சோதனை. இந்தச் சோதனையை முதலில் நாம் வெல்ல வேண்டும். தன் பணிவாழ்வைத் துவக்குவதற்கு முன்னதாகவே இயேசு சோதனைகளைச் சந்தித்தார். சோதனைகளைக் கண்டு அவர் துவண்டு போயிருந்தால், அவர் தன் மீட்புப் பணியைத் துவக்கியிருக்கவே மாட்டார். நல்லவேளை. இயேசு தனக்கு வந்த சோதனைகளை இனம் கண்டு வென்றதால், துணிவுடன் தன் பணிகளைத் துவக்கினார். இயேசு சோதனைகளைத் துணிவுடன் சந்தித்து வென்றது, நமக்கு நல்லதொரு பாடமாக அமைய வேண்டும்.

நாம் துவங்கியிருக்கும் தவக்காலம், மேன்மைதரும் மாற்றங்களை நம் ஒவ்வொருவருக்குள்ளும் உருவாக்கும் வசந்தகாலமாக விளங்க இறைவனை வேண்டுவோம். இந்த மாற்றங்கள் நமக்குள் நிகழவிடாமல் நம்மைத் தடுத்து நிறுத்தும் மனத்தளர்வு என்ற சோதனையை வெல்வதற்கு இறைவனிடம் துணிவை வேண்டுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.