2015-02-21 15:46:00

குற்றக் கும்பல்கள் மனந்திரும்ப திருத்தந்தை அழைப்பு


பிப்.21,2015. திட்டமிட்டக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அல்லது பிறருக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிராக வன்முறைச் செயல்களை வேண்டுமென்றே நடத்துபவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ள இயலாது என்று இத்தாலிய விசுவாசிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தென் இத்தாலியின் Cassano allo Jonio மறைமாவட்டத்தின் ஏறக்குறைய ஏழாயிரம் விசுவாசிகளை இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இயேசுவை அன்புகூர்ந்து, அவரது வார்த்தையைக் கேட்பவர்கள் தீமையின் வேலைகளுக்குத் தங்களைக் கையளிக்க முடியாது என்று கூறினார்.

மரணக் கலாச்சாரத்தை எதிர்த்து வாழ்வின் நற்செய்திக்குச் சாட்சிகளாக வாழுங்கள், தன்னலத்தையும், வன்முறையையும், அநீதியையும் விதைக்கும் மக்கள் முன்னிலையில் உங்களை நிறுத்தாமல், ஒருமைப்பாட்டுணர்வை ஊக்குவிப்பவர்களாக வாழுங்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

பல இளையோரையும் குடும்பங்களையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள வறுமையின் பல புதிய வடிவங்களிலிருந்து மீண்டு வருவதற்கு தூய ஆவியாரின் துணையை நாடுங்கள் எனவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, பிறரின் மாண்பை மதிக்காமல் இருந்துகொண்டு கிறிஸ்தவர் என்று யாரும் தங்களை அழைக்க முடியாது என்றுரைத்தார்

வெளிப்படையான மத அடையாளங்கள், உண்மையான மற்றும் பொதுவான மனமாற்றத்தோடு சேர்ந்து செல்லவில்லையென்றால் அவை கிறிஸ்துவோடும் திருஅவையோடும் ஒன்றித்திருப்பதற்குப் போதுமானவையாக இருக்காது என்றும் உரைத்தார் திருத்தந்தை.

தீமையான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளவர்கள் மற்றும் குற்ற நிறுவனங்களோடு தொடர்புடையவர்கள் மனமாற்றப் பாதையைத் தேர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, உங்கள் இதயத்தை ஆண்டவருக்குத் திறங்கள், உங்களுக்காக இயேசு காத்திருக்கின்றார், நன்மைக்குப் பணிசெய்ய தெளிவாக இருந்தால் திருஅவையும் உங்களை வரவேற்கின்றது என்றும் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூனில், Cassano allo Jonio மறைமாவட்டத்திற்கு, திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.