2015-02-21 16:02:00

கரகாஸ் மேயரின் கைது சர்வாதிகாரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு


பிப்.21,2015. வெனெசுவேலா நாட்டுத் தலைநகர் கரகாஸ் நகர் மேயர் Antonio Ledezma அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது, சர்வாதிகாரத்தை நிரூபிப்பதாய் உள்ளது என்று குறை கூறியுள்ளார் அந்நாட்டுக் கத்தோலிக்கப் பேராயர் ஒருவர்.

இக்கைது குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்துள்ள வெனெசுவேலா நாட்டின் Coro பேராயர் Roberto Lückert அவர்கள், நாட்டில் ஏற்கனவே எரிந்துகொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு எண்ணெய் வார்ப்பது போன்று இது உள்ளது எனத் தெரிவித்தார்.

மேயர் Antonio Ledezma அவர்கள், ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு, ஏறக்குறைய நூறு காவல்துறையினர் அவரது வீட்டில் நுழைந்து கைது செய்தனர். நாட்டைக் கடுமையாய்ப் பாதித்துள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தேசிய அளவில் இடைக்கால அரசு அவசியம் என்பதை வலியுறுத்தும் அறிக்கையில் இவர் கையெழுத்திட்டுள்ளார். அந்த அறிக்கை எல் நாசியோன் தினத்தாளிலும் பிரசுரிக்கப்பட்டது எனச் சொல்லப்பட்டுள்ளது.

இக்கைது, நாட்டில் மக்களாட்சி குறைபடுவதையும், சர்வாதிகாரத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இது இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார் பேராயர் Lückert.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.