2015-02-19 15:48:00

உலகின் பசிபோக்கும் முயற்சியில் கனடா நாட்டு கிறிஸ்தவர்கள்


பிப்.19,2015 நமக்கு கடவுள் வழங்கியுள்ள கூடுதலான கொடைகளை வறியோருடன், குறிப்பாக, பசித்தோருடன் பகிர்ந்துகொள்வோம் என்று கனடா நாட்டு ஆயர் பேரவை கூறியுள்ளது.

துவங்கியிருக்கும் தவக்காலத்தையொட்டி செய்தியை வெளியிட்டுள்ள கனடா ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Paul-André Durocher அவர்கள், அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பு 2013ம் ஆண்டு முதல் மேற்கொண்டுள்ள உலகின் பசிபோக்கும் முயற்சியில் கிறிஸ்தவர்கள் அனைவரும் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

உலகில் நிலவும் வறுமை, அநீதி இவற்றின் வேர்களைக் கண்டு களையவும், உலகெங்கும் அன்பையும், நல்ல மாற்றங்களையும் விதைக்கவும் கிறிஸ்தவர்கள் முன்வர வேண்டும் என்று பேராயர் Durocher அவர்கள், தன் தவக்காலச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

"ஒரே மனித குடும்பம், அனைவருக்கும் உணவு" என்ற மையக் கருத்துடன் அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பு 2013ம் ஆண்டு முதல் மேற்கொண்டுள்ள முயற்சியில் கனடா தலத்திருஅவை, தன் தவக்கால முயற்சிகளை இணைத்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.