2015-02-18 15:36:00

திருத்தந்தை : துன்புறுவோருக்கு உதவ தவக்காலம் தகுந்த தருணம்


பிப்.18,2015 கிறிஸ்துவைப் பின்தொடரும் திருஅவை, தன்னைச் சுற்றியுள்ள வறியோர் மற்றும் துன்புறுவோர் ஆகியோரின் தேவைகளை அலட்சியம் செய்ய இயலாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின்போது உடன்பிறந்தோர் உணர்வை வளர்க்க பிரேசில் ஆயர்கள் அவையின் சார்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாண்டு "உடன்பிறந்த உணர்வு: திருஅவையும் சமுதாயமும்" என்ற மையக்கருத்தில் மேற்கொள்ளப்படும் தவக்கால முயற்சியைப் பாராட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரேசில் ஆயர் அவைக்கு அனுப்பியுள்ள செய்தியில் வறியோரின் துன்பங்கள் கண்டு அக்கறையின்றி வாழ முடியாது என்று கூறியுள்ளார்.

வறியோருக்கு உதவிகள் செய்வது, திருஅவை என்ற நிறுவனத்தின் கடமை என்று ஒதுங்கிவிடாமல், ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகள் செய்வதற்கு தவக்காலம் தகுந்த தருணம் என்று திருத்தந்தை அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி 18, இப்புதனன்று துவங்கும் தவக்காலத்தையொட்டி, பிரேசில் ஆயர்கள் மேற்கொள்ளும் இந்த பிறரன்பு முயற்சி, 52வது ஆண்டாகத் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.