2015-02-14 14:53:00

பொதுக்காலம் 6ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


பிப்ரவரி 11, கடந்த புதனன்று, புனித லூர்து அன்னையின் திருநாளைக் கொண்டாடினோம். அதே நாளன்று, தாய் திருஅவை, நோயுற்றோர் உலக நாளையும் சிறப்பித்தது. திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், 1992ம் ஆண்டு உருவாக்கிய நாள் - நோயுற்றோர் உலக நாள். பார்கின்சன்ஸ் (Parkinson's) நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்த புனித 2ம் ஜான்பால் அவர்கள், உலகெங்கும் பல்வேறு நோய்களால், அதுவும், தீராத நோய்களால் பாதிக்கப்பட்டோருடன் தன்னையே இணைத்துக் கொள்ளவும், நோயுற்றோர் மீது கத்தோலிக்கர்கள் தனி அக்கறை கொள்ளவும் உலக நோயாளர் தினத்தை உருவாக்கினார்.

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11ம் தேதி, லூர்துநகர் அன்னை மரியாவின் திருநாளன்று இந்த உலகதினம் கொண்டாடப்படுகிறது. லூர்து நகருக்குச் செல்லும் கோடான கோடி நோயாளர்கள் அன்னை மரியாவின் பரிந்துரையால் நலமடைந்துள்ளனர் என்பது உலகம் அறிந்த உண்மை. அதிகாரப்பூர்வமாக 69 புதுமைகளே இத்திருத்தலத்தால் அறிக்கையிடப்பட்டுள்ளன என்றாலும், இன்னும் பல்லாயிரம் திருப்பயணிகள், அன்னையின் பரிந்துரையால் மனதாலும், உடலாலும் குணம் அடைந்திருப்பர் என்பதை அனைவரும் அறிவோம். எனவே, இந்தத் திருநாளை நோயுற்றோர் உலக நாளாக புனித 2ம் ஜான்பால் அவர்கள் தேர்ந்ததில் வியப்பு ஏதுமில்லை. கடந்த புதன், பிப்ரவரி 11ம் தேதி, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளை நாம் கொண்டாடியபோது, 23வது உலக நோயாளர் தினத்தைக் கடைபிடித்தோம்.

நோயாளருக்கென ஒரு தினமா? என்று நம்மில் பலர் கேள்வி எழுப்பலாம். நோய் என்றதும், எதிர்மறையான எண்ணங்களே பெருமளவு நம் மனதில் உருவாவதால், நாம் இந்தக் கேள்வியை எழுப்புகிறோம். நோய் பற்றி நாம் கொண்டிருக்கும் எதிர்மறையான, எண்ணங்களிலிருந்து விடுதலை பெற இந்த ஞாயிறு மீண்டும் ஒருமுறை நமக்கு வாய்ப்பு தரப்படுகிறது. மனித வாழ்வின் மறுக்கமுடியாத உண்மைகளான நோயுறுதல், நலமடைதல் என்ற அனுபவங்களை அசைபோட, அவற்றிலிருந்து நமக்குத் தேவையான, தெளிவானப் பாடங்களைப் பயில தொடர்ந்து இரண்டாவது வாரமாக, நோயுற்றோரை இயேசு குணமாக்கும் நிகழ்வை இந்த ஞாயிறன்றும் சிந்திக்க வந்திருக்கிறோம்.

நலம் பெறுவதற்கு மருத்துவ உதவிகள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒருவர் நலமடைவதற்கான முதல் படி, தான் நலமடைவோம் என்று அவர் உள்மனதில் எழும் நம்பிக்கை. இதையும் மறுக்க இயலாது. இந்த நம்பிக்கை போதிய அளவு நம்மிடம் இல்லாதபோது, இறைவனை நாடிவருகிறோம்.

Henry Mitchell என்ற பேராசிரியர் கடுமையான ஒரு நோயிலிருந்து குணமடைந்தார். குணமளித்த மருத்துவருக்கு அவர் நன்றி சொன்னபோது, அந்த மருத்துவர் தந்த பதில், பேராசியரை வியப்புறச் செய்தது. மருத்துவர் சொன்னது இதுதான்: "முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். அடுத்து, உங்களைச் சுற்றியிருந்து, செபித்தவர்களுக்காக நன்றி சொல்லுங்கள். நீங்கள் குணமடைந்ததில் என் பங்கு மிகக் குறைவே" என்று மருத்துவர் சொன்னதும், அவர் தேவையற்ற அளவு தாழ்ச்சியுடன் பேசுவதாக பேராசிரியர் Mitchell அவரிடம் சொன்னார். மருத்துவரோ மறுமொழியாக, "நான் சொல்வதை நீங்கள் நம்பாமல் போகலாம். ஆனால், இதுதான் உண்மை. மருத்துவர்களாகிய நாங்கள் யாரையும் குணப்படுத்துவது கிடையாது. குணமடைவதற்குத் தடையாக உங்களுக்குள் இருக்கும் கிருமிகளை நீக்குவதையே நாங்கள் திறம்படச் செய்கிறோம். மற்றபடி, நீங்கள் குணமடைவதென்பது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை" என்று கூறினார்.

இதைத்தான் புகழ்பெற்ற அறிஞர் ஒருவர் (Banjamin Franklin), வேறுவிதமாகக் கூறியுள்ளார்: "கடவுள் குணப்படுத்துகிறார்; குணப்படுத்தியதற்கான பணத்தை மருத்துவர் வசூல் செய்கிறார்" என்று.

ஒருவர் நலம் அடைவதற்கு, இறைவனின் அருள், நோயாளியிடமும், அவரைச் சுற்றியிருப்போரிடமும் உருவாகும் நம்பிக்கை, மருத்துவரின் திறன் என்ற இந்த வரிசையில் நம் சிந்தனைகள் அமையவேண்டும்.

நலமடைவோம் என்ற நம்பிக்கை, நோயாளியிடம் வளர்வதற்கு, அவரைச் சுற்றியிருப்போரும் உதவவேண்டும். இந்த நம்பிக்கையை அவர்கள் இழந்தால், அதன் தாக்கம் நோயாளியிடம் வெளிப்படும். குறிப்பாக, 'தீராத நோய்கள்' என்றழைக்கப்படும் நோய்களால் பாதிக்கப்பட்டவரும், அவரைச் சுற்றியிருப்போரும், நம்பிக்கையின்றி மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பது கொடுமையான ஒரு சூழல். இன்னும் குறிப்பாக, ஒரு சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சமுதாயத்திலிருந்து விலக்கிவைக்கப் படுவது, கொடுமையின் உச்சம். இத்தைகைய ஒரு கொடுமையைச் சந்திக்கும் 'தொழுநோயாளர்'களைக் குறித்து சிந்திக்க இந்த ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

உலக நோயாளர் தினத்தை எண்ணிப் பார்க்கும்போது, அண்மையில் நாம் கடைபிடித்த மற்றொரு முக்கியமான நாளும் நமக்கு நினைவுக்கு வருகிறது. மகாத்மா காந்தி கொலையுண்ட சனவரி 30ம் தேதி அல்லது அதற்கு நெருக்கமாக வரும் ஞாயிறன்று உலகத் தொழுநோயாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு, சனவரி 25, ஞாயிறன்று நாம் உலகத் தொழுநோயாளர் தினத்தைக் கடைபிடித்தோம். மனித வரலாற்றில் பதிந்துள்ள மிகப் பழமையான நோய் இது. அன்று முதல் இன்று வரை, மனிதர்கள் மத்தியில் பயத்தையும், அருவருப்பையும் உருவாக்கிவரும் நோய் இது என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த நோய் கண்டவர்கள் அனுபவித்துள்ள, இன்றும் அனுபவித்துவரும் கொடுமைகள் ஏராளம். நோயுற்றோரைப் பற்றி, சிறப்பாக தொழுநோயுற்றோரைப் பற்றி சிந்திக்க இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைத் தருகின்றன.

இன்றைய நற்செய்தியின் முதல் மூன்று இறை சொற்றொடர்களை நாம் கேட்போம்:

மாற்கு நற்செய்தி 1: 40-42

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

இப்போது நாம் கேட்ட இந்த வார்த்தைகளை “நற்செய்தி” என்று உரத்தக் குரலில், அழுத்தந்திருத்தமாகக் கூறலாம். இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ள கருத்து மட்டுமல்ல, அக்கருத்தைச் சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளும் நற்செய்தியாக ஒலிக்கின்றன. தொழுநோயுற்ற ஒருவர் நலமடைகிறார் என்ற நிகழ்ச்சி உண்மையிலேயே ஒரு நல்ல செய்திதான். சந்தேகமேயில்லை. இந்த நிகழ்ச்சியைச் சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளும் நல்ல செய்திதான். அந்த வார்த்தைகளைப் பற்றி நாம் முதலில் சிந்திப்பது நல்லது. இந்த நற்செய்தியில் இயேசுவை அணுகிய தொழுநோயாளரைக் குறிப்பிடும் வார்த்தைகள் மரியாதை கலந்த வார்த்தைகளாக ஒலிக்கின்றன. தொழுநோயாளருக்கு மரியாதை தருவதைப்பற்றிப் பேசுவதில் என்ன பெரிய வியப்பு என்று உங்களில் சிலர் கேட்கலாம். நான் விளக்க முயல்கிறேன்.

நாம் இப்போது வாசித்த இப்பகுதி, 1995ம் ஆண்டு வெளியிடப்பட்ட விவிலியப் பதிப்பில் காணப்படும் வார்த்தைகள். இதற்கு முந்தையப் பதிப்பில் தொழு நோயாளரை குறிப்பிட, அவன், இவன் என்ற மரியாதை குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. தொழுநோயாளியை ஒரு மனிதராகப் பாவித்து அவருக்கு உரிய மரியாதையை வழங்குவது நாம் அண்மையில் பின்பற்றும் ஓர் அழகான பழக்கம்.

தொழுநோய், தொழுநோயாளி என்ற வார்த்தைகளைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். 30 வருடங்களுக்கு முன் வெளிவந்த விவிலியப் பதிப்பில், தொழுநோயாளர் என்ற வார்த்தைக்குப் பதில், 'குஷ்டரோகி' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலத்திலும் அவர்களை leper என்று சொல்வோம். நல்ல வேளையாக இப்போது ஆங்கிலத்திலும், தமிழிலிலும் சரியான வார்த்தைகளைப்  பயன்படுத்துகிறோம். குஷ்டரோகி என்றோ, leper என்றோ சொல்லும்போது, இந்த நோய் உடையவர்கள் ஏதோ அந்த நோயாகவே மாறிவிட்டதைப் போல எண்ணி, அவர்களை மனிதப் பிறவிகளாகவே நாம் பார்க்கவில்லை. இன்றும் இந்த நிலை தொடர்வது வேதனைக்குரிய ஒரு போக்கு.

குஷ்டரோகி என்பதற்கும், தொழு நோயாளி என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள். வெறும் வார்த்தைகளில் காணப்படும் வேறுபாடுகள் அல்ல, மாறாக, சிந்தனையிலேயே இவை இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் handicapped  என்ற சொல்லுக்கு physically challenged அல்லது diffrently abled எனவும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது என்ன வெறும் வார்த்தை விளையாட்டுக்கள்தானே என்று நம்மில் சிலர் நினைக்கலாம்.

நாம் பயன்படுத்தும் வார்த்தைகளின் வலிமையைப் பற்றி நாம் நன்கறிவோம். உள்ளத்தின் நிறைவிலிருந்துதான் வாய் பேசும் என்றும், தீயினால் உருவாகும் காயங்களை விட, வார்த்தைகளால் உருவாகும் காயங்கள் மிக ஆழமானவை, ஆறாதவை என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்., உணர்ந்தும் இருக்கிறோம். வார்த்தைகளை மாற்றும்போது எண்ணங்களும் மாறும் என்பது உண்மை. ஒருவரைக் குஷ்டரோகி என்று சொல்வதற்குப் பதில், அவர் ஒரு நோயாளி என்று சொல்லும்போதே, அவரைப் பற்றிய நமது எண்ணங்களும் உணர்வுகளும் வேறுபடும். குஷ்டரோகி என்று சொல்லும்போது உருவாகும் அருவருப்பு, தொழுநோயாளி என்று சொல்லும்போது உருவாவதில்லை. அவரைப்பற்றி சிறிதளவாகிலும் உள்ளத்தில் மரியாதை பிறக்கும். நாம் வார்த்தைகளில் காட்டும் மரியாதை வெறும் வாயளவு மந்திரங்களா அல்லது உள்ளத்தின் உண்மை உணர்வுகளா என்பதையும் நாம் அலசிப் பார்க்கலாம்.

அதேபோல், சாதிய மடமை புரையோடிப் போயிருக்கும் இந்திய சமுதாயத்தில் ஒரு சில குலங்களில், குடும்பங்களில், இடங்களில் பிறந்தவர்களுக்குப்  பிறப்பிலேயே  முத்திரை குத்தி விடுகிறோம். அதனால் அவர்களை பார்க்கும் விதம், அவர்களோடு பழகும் விதம் இவற்றில் வேறுபாடுகள் காட்டுவது, இந்திய சமுதாயத்தின் சாபக்கேடு. இந்தச் சமுதாயக் குற்றத்திற்கும் இந்நேரத்தில் இறைவனிடம் மன்னிப்பு வேண்டுவோம்.

நலம் இழந்தோரை இறைவனிடமிருந்து பிரிந்தவர்கள், எனவே பாவிகள் என்று தீர்மானித்தனர் யூதர்கள். அதிலும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் பாவிகள் என்ற கண்டனம் எழுந்தது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டியதை இன்றைய முதல் வாசகம் இவ்வாறு சொல்கிறது.

லேவியர் நூல் 13: 1-2, 44-46

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு, தீட்டு, தீட்டு, என குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.

இஸ்ரயேல் மக்கள் தொழு நோயாளிகளை நடத்திய விதம் மிகக் கொடுமையானது. அந்த நோய் உடையவர் ஊருக்கு வெளியே தங்க வேண்டும், ஊருக்குள் வரவேண்டிய அவசியம் இருந்தால், ஒரு மணியை அடித்தவாறு வரவேண்டும். இந்த மணிசப்தம் கேட்டதும், எல்லாரும் விலகி விடுவார்கள். தொழுநோயாளி யாரையாவது தீண்டிவிட்டால், அவர்களும் தீட்டுப்பட்டவர் ஆகிவிடுவார்கள். ஒரு சில சமயங்களில், இப்படி நேர்ந்த தவறுகளுக்கு, அந்த நோயாளி கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்.

இந்தப் பின்னணியில் நாம் இன்றைய நற்செய்தி நிகழ்வைக் கற்பனை செய்து பார்ப்போம். இயேசுவைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருந்தது. அந்நேரத்தில் அங்கு வந்த தொழுநோயாளியின் மனதில் எவ்வளவு போராட்டம் இருந்திருக்கும். அந்தக் கூட்டத்தின் நடுவே சென்றால், அவர்கள் கோபத்திற்கு ஆளாகலாம், அந்த கோபம் வெறியாக மாறினால் கல்லால் எறியப்பட்டு சாகவும் நேரிடும். இதெல்லாம் தெரிந்திருந்தும், இந்தத் தொழுநோயாளி இயேசுவிடம் வருகிறார். அந்த நம்பிக்கையே அவர் குணமடைந்ததற்கு முதல் படி.

இயேசு தூரத்தில் இருந்தபடி வார்த்தைகளைக் கொண்டு அவரைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால் இயேசு தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் குணமாக்க விரும்பினார். எனவே, தன் கரங்களை நீட்டி தொழுநோயாளியைத் தொடுகிறார். இயேசுவின் இந்தச் செயல் சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும். அதிர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பது இயேசுவின் நோக்கம் அல்ல. மாறாக, அவர்களும் நலம் பெறவேண்டும் என்பதே அவர் எண்ணம். சட்டங்களால் கட்டுண்டு, பலரை மிருகங்களிலும் கேவலமாக நடத்தும் இஸ்ரயேல் மக்களைக் குணமாக்கவே இயேசு இதைச் செய்தார். தொழுநோயாளியும் குணமானார். இயேசுவைச் சுற்றி இருந்தவர்களும் குணமாகி இருக்கவேண்டும்.

இயேசுவின் குணமளிக்கும் நிகழ்வுகளை நாம் கடந்த இரு வாரங்களாக நற்செய்திகளில் கேட்டுவருகிறோம். குணம் பெறுவோம் என்ற நம்பிக்கை ஒருவர் மனதில் உதிப்பதுதான் அவர் குணம் பெறுவதற்கான முதல் படி என்று சென்ற வாரம் சிந்தித்தோம். நோயுற்றவர்களுக்கு, மனிதப்பிறவிகளுக்குரிய மரியாதையைத் தருவது அவர்கள் குணம் பெறுவதற்கான முதல் படி என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் பயில்கிறோம்.

கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக, (1858, பிப்ரவரி 11ம் தேதி முதல்...) தன்னை நாடிவந்த பக்தர்களுக்கு மனநலத்தையும், உடல் நலத்தையும் இறைவனிடமிருந்து பெற்றுத்தரும் லூர்துநகர் அன்னை வழியே நாம் அனைவரும், குறிப்பாக, உலகில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நலம் பெற்று வாழ இறையருளை இறைஞ்சுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.