2015-02-12 16:17:00

திருத்தந்தை பெனடிக்ட் தலைமைப் பொறுப்பைத் துறந்ததன் 2ம் ஆண்டு


பிப்.12,2015 முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் திருஅவைக்கு வழங்கியுள்ள சிந்தனைகள் மறக்கமுடியாத ஒரு கருவூலம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்பை, தான் துறப்பதாகக் கூறியதன் இரண்டாம் ஆண்டு நினைவையொட்டி, திருவழிபாடு மற்றும் அருள் அடையாளங்களின் நெறிமுறைகளைக் கண்காணிக்கும் பேராயத்தின் செயலராகப் பணியாற்றும் பேராயர் ஆர்தர் ரோச் அவர்கள், CNA கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் திருத்தந்தை என்ற அடைமொழியைக் காட்டிலும் அருள்பணியாளர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுவதை விரும்பும் அருள்பணியாளர் பெனடிக்ட் அவர்கள், தலைமைப் பொறுப்பில் இருந்த வேளையில், ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பிவந்த ஊடகங்களால் துன்புற்றார் என்பதையும் பேராயர் ரோச் அவர்கள் எடுத்துரைத்தார்.

பழகுவதற்கு இனியவராகவும், எளிமையானவராகவும் விளங்கிய அருள் பணியாளர் பெனடிக்ட் அவர்கள் ஆழ்ந்த இறையியல் எண்ணங்களால் திருஅவையில் உருவாக்கியுள்ள தாக்கம் நிலைத்து நிற்கும் என்று பேராயர் ரோச் அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : CNA/EWTN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.