பிப்.11,2015 திருப்பீடத்தின் தலைமை அலுவலகங்களில் மாற்றங்களைக் கொணர்வது குறித்து, உலகின் பல நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள 9 கர்தினால்கள் குழு திருத்தந்தையுடன் ஆலோசனைகள் நடத்தி வந்தனர் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், அருள்பணி பெதேரிகோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
பிப்ரவரி 9 முதல் 11ம் தேதி இப்புதன் முடிய வத்திக்கானில் நடைபெற்ற C9 என்றழைக்கப்படும் கர்தினால்கள் அவை கூட்டங்களில் பல்வேறு திருப்பீட அவைகளை இணைப்பது, மாற்றி அமைப்பது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அருள்பணி லொம்பார்தி எடுத்துரைத்தார்.
பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் அனைத்துக் கர்தினால்களின் கூட்டங்கள் இடம்பெறும் என்றும், இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 14ம் தேதி புதிய கர்தினால்களை இணைக்கும் நிகழ்வும், பிப்ரவரி 15, ஞாயிறன்று, புதிய கர்தினால்களுடன் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியும் நடைபெறும் என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் அறிவித்தார்.
2014ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி, 16 கர்தினால்களை புதிதாக நியமித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு பிப்ரவரி 14ம் தேதி, 20 கர்தினால்களை நியமனம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |