2015-02-10 15:54:00

உலக சமுதாயம் ஐஎஸ்அரசிடமிருந்து நிலங்களை மீட்டுத்தர வேண்டும்


பிப்.10,2015. ஈராக்கில் ஐஎஸ் இஸ்லாமிய அரசால் தங்களின் வீடுகளையும் சொத்துக்களையும் இழந்துள்ள குடும்பங்களுக்கு ஆதரவு வழங்குவதற்குத் தேவையான நிதியை, ஈராக் மத்திய அரசும், குர்திஸ்தான் மாநில அரசும் ஒதுக்க வேண்டுமென கல்தேய வழிபாட்டுமுறை ஆயர்கள் கேட்டுள்ளனர்.

பாக்தாத் நகரில் கல்தேய வழிபாட்டுமுறை ஆயர்கள் நடத்திய ஆண்டுக் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு ஆயர்கள் அரசுகளை வலியுறுத்தியுள்ளனர்.

ஐஎஸ் இஸ்லாமிய அரசின் ஜிகாதிகளால் ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறி துன்புறும் மக்களுக்கு அவசகரகால மனிதாபிமான உதவிகளை வழங்குமாறும், அப்பகுதிகளை மீட்டுத்தருமாறும் ஈராக்கின் தேசிய மற்றும் பன்னாட்டு அதிகாரிகளுக்கும் விண்ணப்பித்துள்ளனர் ஆயர்கள்.

அசீரிய மறைசாட்சிகளின் நூறாம் ஆண்டையும் நினைவுகூர்ந்த ஆயர்கள், ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்து உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்துவரும் வெள்ளிக்கிழமையன்று இம்மறைசாட்சிகள் தினம் கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

1915க்கும் 1916ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அசீரிய மற்றும் சிரிய வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களுக்கு எதிராக, இளம் துருக்கியர் நடத்திய படுகொலைத் தாக்குதல்களில் 7,50,000 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

ஆதாரம் :Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.