2015-02-07 16:29:00

எபோலா நோயால் கைவிடப்பட்ட சிறாருக்கு குடும்பங்கள் உதவி


பிப்.07,2015. மேற்கு ஆப்ரிக்காவில் எபோலா நோய்த் தாக்கத்தால் 16 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறார் பெற்றோரின்றி கைவிடப்பட்டிருந்தாலும், இவர்களில் பலரை குடும்பங்கள் தங்களோடு சேர்த்துக்கொண்டுள்ளன என்று யூனிசெப் நிறுவனம் கூறியது.

ஐ.நா.வின் குழந்தை நல நிதியமான யூனிசெப் நிறுவனம் சார்பில் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய Andrew Brooks அவர்கள், சில குடும்பங்கள் மூன்று முதல் ஏழு குழந்தைகள் வரை தங்களோடு சேர்த்துள்ளன என்றும், 16,600 அநாதைக் குழந்தைகளில் ஏறக்குறைய 500 பேரை மட்டுமே பொதுவான மையங்களில் வைத்து பராமரிக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.

இச்சிறாரில் எண்பது விழுக்காட்டினர் தங்களின் உறவினர் குடும்பங்களோடு இணைந்துள்ளனர் என்றும் அறிவித்தார் Brooks.

எபோலா நோயால் 22,525 பேர் தாக்கப்பட்டனர், இவர்களில் 9004 பேர் இறந்துள்ளனர் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.

ஆதாரம் :UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.