2015-02-07 15:32:00

உலகில், திருஅவையில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும்


பிப்.07,2015. சமூக மற்றும் திருஅவை வாழ்வின் பல்வேறு துறைகளில் பெண்கள் முழுமையாய்ப் பங்கேற்பதற்குப் புதிய வழிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டிய சவாலை இனிமேலும் தள்ளிப் போட முடியாது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட கலாச்சார அவை நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அறுபது பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் பெண்களின் இருப்பு இன்னும் அதிகமாகத் தேவைப்படுகின்றது, இதன்மூலம், மேய்ப்புப்பணி பொறுப்புகளிலும், இறையியல் சிந்தனைகளிலும், குழுக்களிலும், குடும்பங்களிலும், மனிதர்களோடு செல்வதிலும் பல பெண்கள் ஈடுபட முடியும் என்றும் கூறினார்.

பெண்மைக் கலாச்சாரத்தில் சமத்துவமும், வேறுபாடும், தாய்மார், பெண்களும் மதமும், குடும்பங்களில் பெண்களின் முக்கியத்துவம் போன்ற தலைப்புக்களில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை, திருஅவையில் பணிகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்கப்படுமாறும் கேட்டுக்கொண்டார்.

பல்வேறு பொதுப்பணித் துறைகளிலும், தொழில் உலகிலும், மிக முக்கியமான தீர்மானங்கள் எடுக்கவேண்டிய இடங்களிலும் பெண்களின் உயிரூட்டமுள்ள இருப்பை ஊக்குவித்து வளர்க்க வேண்டும், அதேநேரம், குடும்பங்களிலும் குடும்பங்களுக்காகவும் அவர்கள் ஆற்ற வேண்டிய முக்கியமான பணிக்கும் சிறப்பு கவனம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆண்-பெண், இவர்களுக்கிடையே நிலவும் உறவுகள் அவரவரின் தனித்தன்மையோடு நிறைவேற்றப்படவேண்டும் என்றும் கூறிய திருத்தந்தை, கலாச்சாரத்துக்கும் உயிரியலுக்கும் இடையே பெண்களின் உடலமைப்பு என்பது பற்றியும் விளக்கி, பல்வேறு அடிமைமுறைகள், மனித வர்த்தகம், பெண்களின் உடல் உறுப்புகள் சிதைக்கப்படல் போன்ற தீய செயல்களால் பெண்கள் பல்வேறு சந்தைகளில் வெறும் விற்பனைப் பொருள்களாக ஆக்கப்படுவதையும் குறிப்பிட்டார்.

சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்படுகின்ற, சுரண்டப்படுகின்ற, ஆபத்தான சூழல்களில் வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்ற, புறக்கணிப்புக் கலாச்சாரத்துக்குப் பலியாகின்ற பல ஏழைப் பெண்களின் துன்பம் நிறைந்த நிலைகளையும் குறிப்பிட்டுப் பேசினார்  திருத்தந்தை.

குடும்பங்களில் பெண்களின் தவிர்க்க இயலாத பங்கை நாம் மறக்க இயலாது என்றும், இப்பெண்கள் குடும்பங்களின் வாழ்வுக்கும், அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கும்  உண்மையான சக்தியாக இருக்கின்றனர் என்றும், இவர்கள் இன்றி மனிதரின் அழைப்பு இயலாததாக அமைந்துவிடும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“பெண்மைக் கலாச்சாரம் : சமத்துவமும் வேறுபாடும்” என்ற தலைப்பில் திருப்பீட கலாச்சார அவை இம்மாதம் 4ம் தேதி தொடங்கிய ஆண்டுக் கூட்டம் இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.